Saturday, August 24, 2013

திருமுறைக்காக வந்த இறைத் தூதர்

நான் கடந்தமாதம் சென்னையில் சிலநாட்கள் இருந்தபோது மனதுக்கினிய மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் சுமார் ஏழு மணிநேரம் தொடர்ந்து உரையாடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது மறக்கமுடியாத அந்த சந்தர்ப்பத்தை நான் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதையில் வரும் ஒரு இனிமையான பகுதியாகத்தான் இன்னமும் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் வந்த பலன் தான் இந்தப் பதிவு.

ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர், சமூக ஆர்வலர், ஐ.நா அலுவலர், எழுத்தாளர் என்று எத்தனையோ பன்முகங்கள் இந்த எழுபத்திரண்டு வயது இளைஞருக்கு. ஆனாலும் ஏகலிங்கத்துக்கான பெருமையாக ஒரு மிகப் பெரிய அருள்முகம் இவரிடம் உள்ளது. அதுதான் பன்னிரு திருமுறைகளை பார் முழுதும் பரப்புவதும், தமிழரல்லாத இதர மக்களிடம் திருமுறைகளை அவர்கள் மொழியிலேயே கொண்டுசென்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆன்மவழியில் அழைத்துச் செல்வதையும்தான் சொல்கிறேன்.

இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். தமிழில் ஏறத்தாழ ஆயிரம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாடப்பட்ட பதினெட்டாயிரம் பக்திப் பாடல்கள், தேவாரம் திருவாசகம், பெரிய புராணம் என பெயர் கொண்டு தமிழக மக்களிடையே ஆண்டாண்டு காலமாக நிலை பெற்றிருக்கும் தீந்தமிழ்ப் பாடல்கள், தமிழகத்துப் பொற்காலமாகப் போற்றப்பட்ட சோழர்களின் காலத்தில் மிகப் பெரிய அளவில் மக்களிடையே அரசர் பெருமக்களால் எடுத்துச் செல்லப்பட்ட செந்தமிழ் கீதங்கள், பிற்காலத்தில், 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சுமார் நானூறு ஆண்டுகள் தமிழகத்திலே தமிழின் நிலை சற்று கீழிறங்கியபோது (நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்) சைவத் திருமடங்களால் பாதுகாக்கப்பட்ட பாடல்கள் பின்னர் இன்றளவும் அச்சில் வரையப்பெற்று மக்களிடையே புழங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆன்ம ஆறுதல் தரும் பாடல்களான திருமுறைப் பாடல்களின் நீங்காப் புகழ் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்தான். தமிழகத்திலுள்ள் அனைத்து சிவாலயங்களிலும் திருமுறை ஓதுவாரின்றி முழுமையான பூசனை இல்லைதான். இலங்கை தேசம் திருமுறைப் பாடல்களுக்கு மிகப் பலம் வாய்ந்த வேர் கொடுத்ததென்றால் மலேயா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் திருமுறை வழிபாட்டை தண்ணீர் ஊற்றி வளர்த்தனர்.

ஈழத்துப் பள்ளிகளில் திருமுறைப்பாடல்கள் பள்ளியளவிலேயே  கல்விமுறையாக ஆரம்பிக்கப்பட்டு நூறாண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும், கிழக்காசிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஈழத்து அளவில் கற்கமுடியவில்லை. ஆனாலும் தற்சமய காலகட்டத்தில் திருமுறை முறையாக, முறைப்படுத்தப்பட்ட பாடல்களாக தூரக் கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் அங்கே வாழும் தமிழர்கள் மூலமாக பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த அளவில் உலகம் முழுமைக்கும் திருமுறை பிரபலமாவதற்கு வேண்டிய வழிவகைகளைச் செய்து கொண்டிருப்பவர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள். முதலில் நவீன கால முறையான கணிணி வழியாக தேவாரம் எனும் பெயரில் தளம் அமைக்கப்பட்டு அனைத்துப் பாடல்களும் பதிவேற்றப்பட்டு, ஒவ்வொரு பாடலுக்கான (சான்றோர்களின்) விளக்கமும், விரிவுரையும் தளத்தில் ஏற்றப்பட்டது. இந்தத் தளத்தை முதலில் தமிழ் மொழியிலேயே முழுமைப்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டன. பெரும் நிதி உதவி தேவைப்பட்டது. இவை அனைத்தையும் தனிமனிதனாக முன்னின்று முடித்து வைத்தவர்தான் திரு சச்சி அவர்கள். இன்று உலகம் முழுமைக்கும்  தேவாரம் தளம் தமிழில் படிக்க, புரிந்து கொள்ள, ஒருவேளை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாவிட்டால் குரல் வடிவிலும் பண்ணுடன் இசையும் சேர்ந்து கானங்களாக ஒலிப்பதிவு எடுக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் இந்த தளம் சேவை புரிந்து வருகிறது.

சச்சி அவர்கள் இந்த விவரங்களைக் காண்பிக்கும்போது இணையம் மூலமாக (கூகிள் போக்குவரத்துத் துணைகொண்டு) இந்தத் தளத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை விவரங்களையும் அங்கேயே காண்பித்தார். அசந்துதான் போனேன். ஒருநாளைக்கு சராசரியாக 25000 பேர் இந்தத் தளத்தைப் பார்க்க வருகை புரிகின்றனர். உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தமிழர்களின் வருகைப் பதிவேடு அழகாகக் காண்பிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கே நியூசிலாந்து வரை தமிழர்கள் இந்தத் தளத்தில் ஒரு பக்கத்தையாவது தொட்டுப்பார்க்கத்தான் செய்கின்றனர். தமிழன் என்ற முறையில் பெருமிதம் நிறைந்த அந்தத் தருணத்தில் இவ்வுலகிலும் அவ்வுலகிலும் அல்லது எவ்வுலகிலும் அருள் பெற்றுத் தரக்கூடிய பாடல்கள்  அல்லவா என்ற நிறைவும் கூடவே எழுந்ததை எப்படி உணர வைப்பேன்.. இதே சமயத்தில் மலேயாவின் கிழக்குக் கோடிப் பகுதியில் இவர் விஜயம் செய்த போது நடந்த நிகழ்வு ஒன்றினைக் குறிப்பிட்டார்.  ஏற்கனவே பர்மா, தாய்லாந்து, கம்போடியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் சென்று திருமுறை பரப்பியவர்தான் என்றாலும் இந்த நிகழ்ச்சி மனதைத் தொட்டதுதான்.

மலேயாவின் கிழக்குப் பகுதியில் ஒரு கோடியில் சண்டக்கண் என்ற ஒரு குட்டி நகரம் உள்ளது. இந்த நகரத்துக்கப்பால் கடலும் பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவுகளும் வரும். இந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களுக்கென திருக்கோயில் கட்டிக் கொண்டு தங்கள் பண்பாட்டினை மறவாமல் வாழையடி வாழையாகக் கட்டிக் காத்து வருகின்றனர். இங்கு திருமுறை பரப்பும் பணிக்காக சென்ற மறவன்புலவார் இங்குள்ள தமிழருக்கு கணினியில் திருமுறைத் தமிழோசை கேட்கும் விதத்தில் திருமுறைச் சிறப்புகளை எடுத்து விளக்கி இருக்கிறார். தமிழ் தெரிந்த முதியவர்கள் திருமுறைப் படித்து இன்புற்றார்கள் என்றால் இளையவர்களுக்கு பாடல் ஒலிப்பதிவு மூலமாக நம் தமிழ் இப்படி சீரும் சிறப்புமாகக் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர் அவ்வூர் மக்கள். இன்றும் கூட (நான் சென்ற அன்று கூட) தேவார தளத்தைத் தவறாமல் எட்டிப்பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். எங்கேயோ மூலையில் இருக்கும் ஒரு ஊரில் தமிழருக்காக அவர்கள் உய்வதற்காக எத்தனை பெரிய இறைப் பணி செய்திருக்கிறார் என்றுதான் வியக்க முடிந்தது.

திரு சச்சி அவர்களின் கடமை இங்கேயே முடிந்துவிட்டதாக அவரால் நினைக்கமுடியவில்லைதான். (அவர் கடமை நீண்டதாயிற்றே!) திருமுறையின் அனுபவத்தைத் தமிழ் பேசும் மக்கள் மட்டும்தான் உணரவேண்டுமா, மற்ற மொழியினரும் நிச்சயம் பெற வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் வடமொழி, தெலுங்கு, கன்னடம், சீனம், மலாய், சிங்களம், ஆங்கிலம் என்று முடிந்தவரை மொழிமாற்றம் அத்துடன் கூட அந்த மொழியிலேயே விரிவான பொருளோடு கூடிய விதத்தில் தன் பணியைத் தொடங்கிவிட்டார். ஏறத்தாழ ஆரம்பகட்ட வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஈராண்டுகளுக்குள் பல மொழிகளிலும் திருமுறைகள் கணினி வழியாகவும் புத்தக வடிவில் வாசிக்கும்படியாகவும் எல்லாமொழி மக்களுக்கும் சென்றடையும் விதத்தில் மொழிமாற்ற வேலைகளை பலப்படுத்தியுள்ளார். எத்தனை உன்னத பணி... எண்ணிப்பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சி..

மறவன்புலவாருடன் திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து கொண்டு தெலுங்குக்கான மொழிபெயர்ப்பைத் தம் செலவில் புத்தகங்களாகக் கொண்டு வர ஒப்புதல் அளித்துள்ளனர். இப் பணி விறு விறுப்பாக நடந்து வருகின்ற்து.. பன்னிரெண்டு திருமுறைகளையும் பங்கு போட்டு எடுத்துக் கொண்டது போல இவர்கள் அதாவது

திருமதி சசிகலா (விசாகப்பட்டினம்) 1, 2, 3 திருமுறைகள்
பேரா. சத்தியவாணி (குப்பம்) 4, 5, 6, 9 திருமுறைகள்
பேரா. அரம்பை பேரா. பரிமளம் (குப்பம், ஐதராபாத்) திருமுறை
பேரா. மூர்த்தி + பேரா. முனிரத்தினம் (சென்னை) 7, 11 திருமுறைகள்,
திருப்பதி பேரா. முனிரத்தினம் (திருப்பதி) 10 திருமுறை
திருப்பதி பேரா. செயப்பிரகாசம் (திருப்பதி) 12ஆம் திருமுறை 
ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாக தங்கள் திருப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருஞானசம்பந்தரின் தெய்வத்தமிழான முதல் திருமுறையை புத்தக வடிவிலேயே திருப்பதி தேவஸ்தானத்துக்கு சமர்த்திருக்கிறார் திரு மறவன்புலவார். அப்படிப் பதிக்கப்பட்ட முதல் திருமுறை தெலுங்குப் புத்தகத்தைக் காண்பித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள். அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்போது கண்கொள்ளா காட்சியாகத்தான் இருந்தது. தெலுங்கு மக்களும், தெலுங்கு சான்றோர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது இப்பெருமக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு எத்தனை அழகாகச் செய்யப்படுகின்றது என்ற எண்ணமும், பெருமிதமும் கூடவே தோன்றியது என்பதை இங்கே சொல்லாமல் இருக்கமுடியவில்லை..

வடமொழியில்  பேரா. தியாகராசன்பேரா. கோதண்டராமன்பேரா. காமாட்சிகவிதாயினி மதுமிதா போன்றவர்கள் மொழி பெயர்த்து வருகின்றனர். ஹிந்தி மொழியில் சென்னை பேராசிரியர் ந. சுந்தரம் உதவியுடன் மொழி பெயர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் உலகப் பொது மொழியாகப் புகழ் பெற்றுள்ள இன்றைய கால கட்டத்தில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

அதே போல கன்னடத்துக்கும் மொழிபெயர்ப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே ஒன்பதாம் திருமுறை கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு புத்தகமாகக் கூட வந்து விட்டது. மலையாளத்தில் திருவாசகம் மொழிமாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் திருவாங்கூர் மன்னாரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. திருமந்திரம் முழுவதுமாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மியான்மர், மலாய் மொழிகளிலும் மொழி மாற்றத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. திரு சச்சிதானந்தமே முன்னின்று மியான்மர் (பர்மா) சென்று வந்தார்.

அதே போல தாய்லாந்து நாட்டில் அரசகுரு அவர்களைச் சந்தித்து அவர்கள் இன்றும் பாடுகின்ற திருப்பாவை, திருவெம்பாவைகளை சரியான எழுத்துமுறையில் வடிவெடுத்து உதவி இருக்கிறார். அரச குருவுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் நிறைவுற்றதற்கான திருப்தியையும் கூடவே தந்துள்ளார்.

இந்த மொழி மாற்றத்தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது என்ன விஷயமென்றால் திருமுறைப்பாடல்கள் எல்லாமே (அவர்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும்) தமிழ் மொழியில்தான் இசைக்கப்படவேண்டுமென்பதில் கவனமாக இருப்பதுவும், அதே சமயம் தாம் என்ன பாடுகிறோம் என்பதற்கான பொருள் அவரவர் மொழிகளில் எளிமையாக அமையப்படுவதும்தான். பொருள் எளிமையாக இருந்தால்தானே பாமரமக்களும் பயனடையவேண்டும். “சொல்லற்கரியானை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்வார் செல்வர் சிவனடிக்கே” என்பதல்லவா மணிவாசகரின் முத்தான வாக்கு!

எத்தகைய புனிதப் பணிகள். ஒருபக்கம் தமிழ்த்தாய் தரணி முழுதும் தாங்காப் பெருமிதத்துடன் பவனி வருகிறாள் என்பது ஒருபக்கமும், அப்படிச் செல்கின்ற தமிழ் நம் முன்னோர் தந்த தெய்வத்தமிழ் என்ற பெருமையும் ஒருங்கே சேருகின்றது அல்லவா.

மறவன்புலவாரை இறைவன் தன் சார்பாக தன் தூதனாக திருமுறை பரப்ப அனுப்பி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். இந்த இறைத்தூதரைக் கேட்டால் எல்லாம் தருமபுரம் ஆதீனம் ஆரம்பித்து வைத்த வேளை என்று கையைக் காட்டுவார். ஆதீனத்தைக் கேட்டால் இறைவன் அருள் பெற்ற மறவன் புலவாரின் பணி என்று சொல்லலாம்..

இந்தச் சமயத்தில் இன்னொன்றையும் இங்கு சொல்லி விடுகிறேன். இந்தப் பெரியாருடன் ஒருமுறை மகாசிவராத்திரியன்று திருமலை சென்றபோது திருவேங்கடத்தவன் சிறப்பு தரிசனமாக ஐம்பது நிமிடங்களுக்கும் மேலாக அவன் சன்னிதியின் அவன் முன்னே எங்களை நிறுத்திக் கொண்டபோதே இவர் பெருமை எனக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது. திருமுறையை எளிய வகையில் பரப்பி வரும் இந்த சிவப்பெரியாரின் தொண்டு சாதாரணமானதல்ல.. ஆன்ம ஞானம் குறைந்து வரும் இச்சமயத்தில் மக்களுக்கு மிக மிகத் தேவையானது கூட. இத்தகைய எளியோரின் அரிய செயல்களுக்குதான் தெய்வத் திருமலையில் கால் வலிக்க நின்று காத்துக் கிடக்கும் இறைவன் எப்போதும் இவர்களை தன் இதயத்தின் பக்கத்தே வைத்து அவர்களையும் காக்கின்றான் அதனால்தானோ என்னவோ. இவர்போல பக்தர்கள் வரும்போது அவன் எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் தரிசனம் தந்துகொண்டேதான் இருப்பான் என்று தோன்றியது.. பூவுடன் சேரும் நார் போல அடியேனுக்கும் கொஞ்சம் அந்த அதிர்ஷ்டம் அடித்தது என்பதும் கூட புரிந்தது.

இந்த இறைப்பணியைப் பற்றியும், இவரின் விடா முயற்சியைப் பற்றியும், இவரது குழந்தை உள்ளத்தைப் பற்றியும் இன்னும் நிறைய எழுதலாம்தான். அத்துடன் மறவன்புலவார் கம்போடியா சென்று சிவபதமலையில் ( Kabal Spean) நெடுக நடந்து உள்ளத்திலே பெரும் ஆர்வத்துடன் தூய மலர்கொண்டு அங்கே நதியில் கண்டும் காணாத அளவில் அபிஷேகத்தில் மூழ்கும் ஆயிரம் சிலலிங்கங்களுக்கு பூசை செய்ததையும் பற்றி எழுதவேண்டும்.. அங்கோர்வாட் ஆலயம் எப்படி நகரவட்டம் என்ற அழகிய தமிழ்ச் சொல்லிலிருந்து மருவியதைப் பற்றியும் அவர் விவரித்ததையும் கம்போடியா காரைக்கால் அம்மையார் சிற்பப் பெருமையை அவர் விவரித்த அழகையும் எழுதவேண்டும்தான். அதுவரை இங்கே சிவபதமலையில் இவர் கடந்து சென்ற பாதையையும் நீங்களும் கண்டு மகிழ்ந்து தரிசிக்கலாமே (அங்கே உள்ளே ஒரு சிற்பத்தை கீழே கொடுத்துள்ளேன் - மும்மூர்த்திகளின் சிறபங்களுடன் கீழே நதி ஜலத்தில் சகஸ்ர லிங்கரூபிணியாக பரமாத்மா..)


வாழ்க மறவன்புலவார்தம் இறைப்பணி!! தொடர்க இன்னும் பல ஆண்டுகள்..!!

4 Comments:

At 7:12 AM, Blogger Kavinaya said...

ஐயா அவர்களின் பணி மிக மிகச் சிறந்தது. நினைத்துக் கூடப் பார்க்க இயலாத மாபெரும் பணியை அடக்கமாகச் செய்திருக்கிறார். தேவாரப் பாடல்கள் தளத்திற்கு அடிக்கடி செல்பவர்களில் நானும் ஒருத்தி. அவருடைய இறையருள் கூடிய பணிகளை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் தர இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு, ஐயா அவர்களை பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன்.

 
At 10:59 AM, Blogger அப்துல் ஜப்பார் said...

அவர் தன்னைப்பற்றி எதுவுமே அதிகம்
சொல்லமாட்டார். ஆனால் அதிகம்
அதிகமாக ப நற்பணிகள் செய்கிறார்
என்பது மட்டும் தெரியும். உங்கள்
மூலம் அவரது பணிகள் பற்றி சற்று
கூடுதல் அறிந்ததில் மகிழ்ச்சி.

உங்களுக்கும் அவருக்கும் என் இனிய
நல்வாழ்த்துகள். சாத். அப். ஜப்பார்.

 
At 6:41 PM, Blogger நடராஜன் said...

ஐயா

இறைவன் எதிபாராத நிலையில் அடியார்களுக்கு அருளியதை படித்துள்ளேன்.இம்மாதிரி நமக்கும் தோன்றாத? என உள்ளத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது அருள் நிலையம் உருத்து வந்து ஊட்டும் என்பதை கண்டு கொண்டேன். உண்மையைச் சொன்னால் உங்கள் தொடர்பை எப்படி பெற்றேன் என்பதே தெரியாது இருப்பினும் ஏதோ கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இயல்பு தான் நீங்கள் யாரென்று தெரியாத நிலையில் ஏதோ நினைவில் உங்களுக்கும் என்பதிவை அனுப்பியது இறை அருளே என நினைத்து மகிழ்கிறேன். பாட்டின் பொருள் உணர்ந்தால் மட்டுமே அதில் ஈடுபாடு ஏற்படும் என்பதால் அப்படிப்பட்ட தொடர்பு கிடைத்தமைக்கு நன்றிகள்

 
At 6:14 PM, Blogger திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_4.html

 

Post a Comment

<< Home