Friday, November 25, 2011

கடலில் தள்ளப்பட்ட கப்பல்


தமிழர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் வல்லவர்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பதில் நமக்குப் பெருமை மிக அதிகம். இன்னமும் கூட பழம் பெருமைப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டி விடலாம் என்றுதான் நாம் இருக்கின்றோமே தவிர, அந்தப் பெருமை மிக்க பழங்காலம் திரும்பவும் வரவேண்டும் என்று யாரேனும் முயற்சி செய்கிறோமா என்றால் நிச்சயம் அவர்களை விரல் விட்டு எண்ணத்தான் வேண்டும். அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு மனிதரைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

இடம் சென்னையின் பெரிய ஹோட்டல்களில் ஒன்று, கலந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கணிசமான அளவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், அதிலும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பிரிட்டனின் தூதுவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி. முதலில் அவர்களுக்குத் தெரிந்த பல செய்திகளை, அவர்களும் நாமும் இருவருமாகக் கூட மறந்து போன பல செய்திகளை இந்த மகாமனிதர் பகிர்ந்து கொள்கிறார், அப்படிக் கூட இல்லை, அடிமையாகிக் கிடந்த நம் புத்தியின் மகிமையைத் தீட்டிக் கூர்மைப் படுத்த முயல்கிறார், அடிமையாக ஆட்டுவித்த அந்த பிரிட்டனின் அந்தக் காலத்து அநீதிகளை அவர்கள் முன்னேயே படம் பிடித்துக் காண்பித்து, எப்படியெல்லாம் உயரத்தில் இருந்த இந்தத் தமிழர்களும் இந்தியர்களும் ஒரு இரண்டு நூற்றாண்டுகளில் எப்படியெல்லாம் கீழ்மையாக ஆக்கப்பட்டு அடிமையாகக் கட்டுண்டுக் கிடந்தோம் என்பதையும் ஆழமாக பார்வையாளர் மத்தியில் பதிவு செய்கிறார்.

பண்டைய காலத்தில் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பே நாம் கடல்வணிகத்தில் எப்படியெல்லாம் முன்னேறி இருந்தோம், ரோமானியருடனும், கிரேக்க யவனரிடமும் எப்படியெல்லாம் வணிகத்தில் தொடர்போடு இருந்தோம், பண்டைய எகிப்தில் கிடைத்த பானை ஓட்டில் தமிழ்ப் பிரம்மி எழுத்து எப்படி அங்கே கிடைத்திருக்கும், அதே போல ரோமானிய மன்னர் பதித்த காசுகள் போல நாமும் எப்படியெல்லாம் காசுகளைப் பொறிப்பித்தோம், தமிழ் சீனத்தில் கல்வெட்டில் கிடைத்ததும் அங்கு உள்ள மங்கோலிய மன்னரை தமிழில் வாழ்த்திப் பாடி, கல்லில் பொறிப்பித்து கோயில் கட்டியது, பல்லவர்களும், சோழர்களும் எப்படியெல்லாம் கடல் வணிகத்தை வளப்படுத்தினர், ராஜேந்திர சோழன் சோழ வளநாட்டின் எல்லையை கடலுக்கும் அப்பாலும் எப்படியெல்லாம் விரிவுபடுத்தினான், எங்கேயோ ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தமிழன் தன் கால் தடத்தைப் பதித்ததோடல்லாமல் கிண்கிணிக்கும் கப்பல் மணியில் மேற்பரப்பில் கூட தம் மொழியைப் பதிப்பித்தான் என அவர் சொல்லச் சொல்ல சபையில் பலர் வியப்போடுதான் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதையும் இங்கே சொல்லிவிடவேண்டும்.

ஒரு இந்தியனோ அல்லது தமிழனோ தம் பெருமையைக் கூறவரும்போது நம்மவர்களே எதிர்ப்பார்கள். அதனால்தானோ என்னவோ, ஜப்பானியரான நோபோரு கரஷிமா’ வின் அறிக்கையை அங்கே படித்தார். “கீழைக் கடல் பிராந்தியத்தில் கிடைத்த ஏழு பழங்கல்வெட்டுகளில் கிடைத்த செய்திகளிலிருந்து தமிழர் வணிகம் எப்படி ஒரு ’கார்பொரேட் கல்சராக’ அந்தக் காலத்திலேயே இருந்தது என்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இந்த வணிகக்குழுக்கள் முறையாகவும் ஒற்றுமையாகவும் ஐந்நூற்றுவர், நாநாதேசிகள், மணிக்கிராமம் என்றெல்லாம் தமிழ்பெயர்கள் கொண்டு செயல்பட்டதை இந்த கீழை நாடுகளில் கண்டபோது தமிழர்கள் எப்படியெல்லாம் சிறந்து விளங்கினர் என்பது புரியும்” (Ancient and Medieval Commercial activities in Indian Ocean by Noboru Karashima).

வந்திருந்த விருந்தினர்கள் ஒருகாலத்தில் நம்மை ஆண்டு அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் என்பதும் அவர் மறந்து விடவில்லை, வந்தவர்களுக்கும் அதை ஞாபகப்படுத்தினார் போலும்.

வர்த்தகம் செய்ய கீழைக்கடற்கரை வந்த ஆங்கிலேயர், இந்நாட்டு மன்னர்களைப் பிரித்து, பின் அவர்கள் நாட்டையும் விலைக்கோ அல்லது வில்லத்தனமாகவோ வாங்கிய பின் நடத்திய கொடுமைகள் இந்தத் தலைமுறை ஆங்கிலேயருக்குத் எல்லோருக்கும் தெரியவேண்டும், என்பது அவர் பேச்சில் உறுதியாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு வரை நாம் கடலில் கலம் விட்டுக்கொண்டிருந்தோம் என்பதையும் நம் கடல் வணிகம் வரலாறு கடந்தது என்பதையும் ஆங்கிலேயர் மறக்கடிக்கச் செய்த மூளைச் சலவைத் திட்டங்களையும் சுட்டிக் காண்பித்தார்.

கி.பி. 1639 இல் தமிரால வெங்கடாத்திரி நாயக்கனிடமிருந்து மதராஸை விலைக்கு வாங்கியது
1646 இல் நேவிகேஷன் ஆக்ட் மூலம் இந்தியக் கடல் பிராந்தியத்தை தம் கட்டுக்குள் கொண்டு வர முயன்றது
1650 ஆலிவர் கிராம்வெல் அந்தச் சட்டத்தை இன்னமும் தீவிரமாக்கியது
1789 இல் கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கொண்டுவந்த ஒரு சட்டத்தால் பிரிட்டிஷார் அனுமதியின்றி எந்தப் படகும் கடலில் செல்ல இயலாது என்ற நிலைமை
1814 இல் வந்த சட்டம் இன்னும் கொடுமையானது. ஆங்கிலக் கப்பலில் பணிபுரியும் இந்தியர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகக் காட்டும் சட்டம் – இது இந்தியர்கள் பிற்காலத்தில் கடலில் மரக்கலம் செலுத்தக் கூட ஆட்கள் கிடையாது என்ற நிலையை உருவாக்கியது.
1875 இலிருந்து இஞ்ச்கேப் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் இந்திய மரக்கலங்களே இல்லாமல் செய்யச் செய்தது

இதனால் பல இந்திய மரக்கல உரிமையாளர் தம் தொழிலை விட்டு விட்டு வேறு அடிமை வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டதும், பின்னாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை தம்முடைய சுதேசிக் கப்பல் கம்பெனியை எத்தனையோ இடையூறுகளுக்கிடையேயும் ஸ்தாபன் செய்தாலும் அதைத் தொடர முடியாமல் கடனாளியாகி வஞ்சிக்கப்பட்டு சிறையில் கொடுமை செய்யப்பட்டதும் யார்தான் அறிய மாட்டார்கள்? (பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி தம் கப்பலில் பயணம் செய்பவர்கள் பிரயாணிகள் கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்று அந்தச் சமயத்தில் அறிவித்திருந்தார்கள் – தாம் நஷ்டமடைந்தாலும் எதிரி அடியோடு ஒழியவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்).

சிதம்பரனார் மட்டுமல்ல, அதே காலத்தில் ரவிந்தரநாத தாகூரில் சகோதரர் ஜ்யோதேந்திர நாத் கூட ‘பெங்கால் ஸ்டீம்ஷிப் கம்பெனி’ இப்படி ஆரம்பித்து நஷ்டத்தை ஈட்டினார். 1922 இல்தான் தமிழரும் வழக்கறிஞருமான பி.எஸ். சிவஸ்வாமி அய்யர் இனி இந்தியர்களும் கப்பல் தொழிலில் சமானமான இடத்தைப் பெறவேண்டுமென மேலவையில் ஒரு மசோதா கொண்டுவந்தார். இந்திய மாலுமிகள் முதலில் முறையான பயிற்சியைப் பெறவேண்டுமெனவும், ஆங்கிலேயருக்கு நிகரான கப்பல் தொழிலில் ஆரவத்துடன் ஈடுபடவேண்டுமெனவும் தீர்மானம் சட்ட வடிவம் பெற்றது. அதன் பிறகும் சிந்தியா கம்பெனிக்கு பிரிட்டிஷ் தொந்தரவு கொடுக்கச் செய்து அதை மூடவும் வைத்தது. ஆனாலும் எப்போதோ இழந்துவிட்ட ஒரு முக்கியமான அறிவை மறுபடியும் விதைக்க வைத்து அறுவடை செய்வது என்பது காலம் போகப் போகத்தானே தெரியும். அந்த அறுவடை கூட பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரே நடைபெற்றது. 1950 இல்தானே எஸ் எஸ் ஜலகோபால் சிங்கப்பூருக்கு இந்தியக் கொடியில் இந்திய காப்டனுடன் இந்திய மாலுமிகளோடு சென்ற முதல் கப்பல்.. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் இந்தியக் கப்பலானது பரிபூரண சுதந்திரத்தோடு வங்கக் கடலில் தவழ்ந்து முன்னேறியது.

இன்றும் கூட இந்தியாவில் நம் தேவைக்கேற்ப கப்பல் கட்டும் தொழிற்சாலைகளோ, சொந்தக் கப்பல்களோ கிடையவே கிடையாதுதான். 16ஆம் நூற்றாண்டு வரை தம் கப்பலில் கொடி கட்டிப் பறந்தவர்கள் இன்று பிறர் நடத்தும் கப்பல் கொடியில் கீழ்தான் இன்னமும் ஏராளமாக வேலை செய்கிறார்கள் என்பதும் ஒரு வருத்தமான செய்திதான்.

ஆனாலும் சரி, நம் பொருளாதாரத்தையும் கப்பல் அறிவுச் செல்வத்தையும் சேர்த்து சீரழித்த பெருங்குற்றம் ஆங்கிலேயர் மேல் ஆண்டாண்டு காலமாகத் தான் தொடுத்துக் கொண்டே இருப்போம்.. அதே சமயத்தில் நம் மண்ணின், மொழியின் பழம்பெருமை பேசிப் பேசியே காலத்தைப் போக்குவோம் என்றில்லாமல் நம் நாட்டின் பொது முன்னேற்றம் என்ற குறிக்கோளுடன் மனதிற் கொண்டு முன்னேறுவோமாக.. எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேறவேண்டும் என்ற உண்மை நிலையை நாம் உணரவேண்டும்.. உணர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே நம் பழம் பெருமையைக் காப்பவர்களாக நம்மை எதிர்காலம் சுட்டிக் காட்டும்.

இப்படி சபையே உணர்ச்சிக் கட்டத்தில் இருக்க வைத்து உரை நிகழ்த்தியவர் வேறு யாருமல்ல. கடலோடி திரு நரசய்யா அவர்கள்தான். உரையை முடித்ததும் அங்கிருந்த ஆங்கிலேய விருந்தினரிடம் கடைசியில் அவர் பணிவோடு சொன்னது.. “உங்களுக்கு இவை எல்லாம் கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் சரித்திரத்தை மாற்றி எழுதமுடியாதல்லவா.. இருந்தும் இந்தத் தலைமுறையினராக இருக்கும் உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை” இது நரசய்யா அவர்களின் பணிவு.

கடைசியில் அந்த இங்கிலாந்து துணைத் தூதுவர் மைக் அவர்களிடம் ஒரு விஷயம் கேட்டேன் ‘உங்கள் முன்னோர்களின் இத்தகைய கொடுமைகள் பற்றி இன்று உங்கள் காலத்தவருக்கு விவரமாகத் தெரியுமா என?” அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். “தெரியும்.. ஆனால் இப்போது நாங்கள் மிக மிக மென்மையானவர்கள். சில விஷயங்கள் அதுவும் கொடுமையான சட்டங்கள், ஆதிக்கவரலாறு இவையெல்லாம் படிக்க, கேட்க எங்களுக்கு இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது.. நாங்களா அப்படிச் செய்தோம் என்று”

என்ன இருந்தாலும் திரு நரசய்யா அவர்களின் நெஞ்சுரம் மிக்க இந்தப் பதிவு எத்தனையோ பேரை சிந்திக்க வைக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

Thursday, September 08, 2011

7, மாணிக்கவாசகர் - மூவருக்கும் முன்னவரா, பின்னவரா (இறுதிப்பகுதி)



மாணிக்கவாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னவரா அல்லது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவரா என்ற அவர் காலத்துக்காக ஏறத்தாழ எல்லாச் செய்திகளையும் அலசிவிட்டோம் என்றாலும் மூவர் பாடிய பாடல்களில் இவர் பெயர் வருகிறதா அல்லது வாதவூரர் பாடிய பாடல்களில் மூவர் பற்றிய செய்தி ஏதேனும் வருகிறதா என்றால் பதில் அப்படி இல்லைதான் என்பதே. மூவர் பாடிய தேவாரங்களில் பாடல் பெற்ற தலங்கள் பெரும்பாலும் சோழநாட்டையும் தொண்டை நாட்டையுமே சார்ந்தது என்பதும், பாண்டிய, சேர நாட்டுத் திருத்தலங்கள் என வரும்போது சிவத்தலங்கள் பெரும்பாலும் வைப்புத்தலங்களாக மட்டுமே பாடப்பட்டவை என்பது உண்மைதானே.

மூவர் பாடிய பாடல்களில் பாடல் பெற்ற தலங்கள் 275 என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அவர்கள் செல்லாமலேயே தாம் பாடிய பாடல்களில் ஊரின் பெயர் பெற்றிருந்த தலங்கள் 267 பாரதமெங்கும் உள்ளன என்பதை அந்தப் பாடல்களிலிருந்தே அறியலாம். இவை தேவார வைப்புத் தலங்கள் என்று பெயர் பெற்றவை. இப்படிப்பட்ட வைப்புத் தலங்களில் மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறையும் அவர் பிறந்த வாதவூரும் இடம் பெறுகிறது. அப்பர் சுவாமிகள் பாடும் பாடலில் இரண்டு முறை (6-70-2, 6-71-11) பெருந்துறைக் கோயில் இடம்பெற்கின்றன. அதைப் போல வாதவூர் கோயில் பற்றி திருஞானசம்பந்தர் தம் பாடல் ஒன்றில் (02-39-7) போற்றிப்பாடுகிறார். ஆனால் அப்பர் சுவாமி பாடும் பெருந்துறைப் பாடல் அங்குள்ள் ஆதி கைலாயநாதர் கோயில் என்பதாகவும் அது பெருந்துறை அருகில் உள்ள வடக்கூர் என்ற பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருந்தால் வடக்கூர் என்றுதானே அப்பர் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கவேண்டும். பெருந்துறை என்று ஏன் இரண்டு முறை இரு வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தார் என்றும் பார்க்கவேண்டும்.

அடுத்து உத்தரகோசமங்கையூர். இது சிறந்த சிவபக்தனான இராவணனின் மனைவியான மண்டோதரியின் பிறந்த ஊர் என்று.(http://www.shaivam.org/siddhanta/sp/spt_t_uttarakocamangai.htm) சொல்லப்படுகிறது. மாணிக்கவாசகர் 38 இடங்களில் உத்தரகோசமங்கையூரைப் பற்றிப் பாடி இருக்கிறார். ஆனால் இத்தலத்தை மூவர்களில் ஒருவர் கூட பாடவில்லை. வைப்புத் தலமாகவும் போற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த ஊர் பாண்டியப் பழம்பதி என்பதும் சங்க இலக்கியத்தில் இலவந்திகைப்பள்ளி எனவும் குறிக்கப்பட்டதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. தேவார மூவர்களும் பாண்டியநாட்டில் பல சிவத்தலங்களைப் பாடவில்லை என்பதும் கவனத்தில் கொண்டு இந்தச் செய்தியை நோக்கவேண்டும். மேலும் தேவாரமுதலிகள் எழுதிய பெரும்பகுதிப்பாடல்கள் கிடைக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இப்படிப் பார்க்கையில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்கவேண்டும். மாணிக்கவாசகர் சிவனடியார்களைப் போற்றி பல பாடல்களைப் பாடியவர். திருக்கோத்தும்பி பதிகத்தில்

”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”

திண்ணன் கண்ணப்பர் இறைவன் மீது வைத்த அன்பு என்பது ஒப்பில்லாத அன்பு, அந்த அன்போடு ஒப்பிட்டால் நான் இறைவன் மீது வைத்திருக்கும் என் அன்பு என்பது ஒன்றுமே இல்லை என்று பொருள் வரும்.

இன்னொரு பதிகத்தில் அடியவர் பற்றி அழகாகச் சொல்கிறார்.

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்
அருளைப் புரியாய்

(சக்தியானவள் உன் இதயத்தில், அந்த சக்தியின் இதயத்தில் நீ இருக்க, எனது உள்ளத்தின் நடுவிலோ சிவனும் சக்தியுமாய் இருவரும் இருக்க, இப்படிப்பட்ட நான் உன் அடியார் உள்ளத்திலும் இருக்க அருள் புரிவாய் ஈசனே!)

இந்தப் பாடல் ஒன்றே வாதவூரர் எப்படியெல்லாம் சிவனடியார்களை மதித்துள்ளார் என்பதற்கு சான்று.. இப்படிப்பட்ட பெரும் வள்ளல், சீர்காழியைப் பற்றி சொல்லும்போது “கழுமலமனதிற் காட்சி கொடுத்தும் (கீர்த்தித் திருவகவல்) என்று தனக்கு சிவன் கழுமலத்தில் காட்சி கொடுத்ததை பாடும் வாதவூரர், சீகாழிப்பதி ஞானசமபந்தன் எனும் சிவப்பாலகன் ஞானப் பாலுண்டு சிறிய வயதிலேயே பல கோயில்கள் பாடி, மதுரையம்பதியிலே சமணர்களோடு வாதில் வென்றதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட நிகழ்ச்சியும் மதுரையில் சமணர்களை வென்ற நிகழ்ச்சியும் என்பது சாதாரணமான மனிதச் செயல் அல்ல. சம்பந்தர் வாழ்ந்த காலத்திலிருந்து மிகச் சிறப்பாக பிற்காலம் முழுவதும் பேசப்பட்ட நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வார்த்தையும் மாணிக்கவாசகர் நாவிலிருந்து வரவில்லை. அதே போல கல்லிலே கட்டி கடலில் போடப்பட்ட நாவுக்கரசரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட மாணிக்கவாசகர் பாடலில் இல்லை, திருநாவலூரில் ஆட்கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமியைப் பற்றியும் ஒரு வரி பாடவில்லை. எத்தனைதான் 8ஆம் நூற்றாண்டு சுந்தரர் பாடல்கள் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொகுக்கப்பட்டாலும் எல்லா சிவன் கோயில்களிலும் ஆங்காங்கே பாடப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கங்களை (ஏதோ சில்வற்றையானும்) அடியார்கள் ஓதிக் கொண்டுதானே இருந்தார்கள். வாதவூரார் தில்லையிலே தங்கினார், சீர்காழி சென்றுள்ளார், திருவிடைமருதூர் சென்றுள்ளார், தேவார முதலிகள் பாடிய காவிரி கீழ்ப்பகுதி தலங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று வந்ததையும் குறிப்பேட்டில் எழுதுவது போல கீர்த்தித் திருவகலில் தந்துள்ளார். இத்தனைக்கும் வாதவூரரின் அனைத்துப் பாடல்களும் கிடைத்த நிலையில், சிவனடியார்களை இதயத்தில் வைத்துப் போற்றும் வாதவூரர் ஏன் ஞானசம்பந்தரைப் பற்றியோ, அப்பர் பற்றியோ அல்லது சுந்தரர் பற்றியோ பாடவில்லை என்ற கேள்வி எழுகிறது.

“கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”
என்ற வரி மாணிக்கவாசகர் பாடலில் வருகிறது. அதை வைத்து அவர் மூவர்களுக்குப் பிற்காலத்தினர் என்று சொல்பவர் உண்டு. மாயவனும் சிவனும் அந்த முற்காலக் கட்டங்களில் ஒரே கோயிலில் இருப்பது சகஜம்தான். மதுரையில் சுந்தரேசப் பெருமானுக்குத் திருமணம் தம் கையால் முடித்தவனே பெருமாள்தான். தில்லையில் சிவனின் ஆனந்த தாண்டவம் காண மாயவன் முன்பே வந்திருக்கமாட்டானா? முதலாழ்வார் காலத்தில் சிவனும் விஷ்ணுவும் சமமாகவே கோயிலில் போற்றப்பட்டதை அவர்களது சில பாடல்களே சொல்கின்றன. மகேந்திர பல்லவன் மும்மூர்த்திகளுக்கும் சேர்ந்து குடைவரை எடுப்பித்தவன், காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு உள்ளேயே விஷ்ணுவும் கோயில் கொண்டுள்ளார். திவ்யஸ்தலம் கூட. அதே போல ஒன்றாம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்ட பேரூர் சிவாலயத்தில் வரதராஜப்பெருமாள் இருக்கிறார். இத்தலம் வைப்புத்தலம் கூட. மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறையுடன் பேரூரையும் புகழ்ந்து ஒரே பாட்டில் திருநாவுக்கரசர் பாடியுள்ளார். (6-70-2)அப்படிப்பட்ட காலத்தில் தில்லையில் மாயவன் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில்தான் குடியேறினான் என்று எந்த சரித்திர ஆசிரியரும் மிகச் சரியாகச் சொல்லவில்லை. தந்தி வர்மன் காலத்தில் விஷ்ணு தில்லையில் வந்திருக்கலாம் என்பது வெறும் ஹேஷ்யம்தான். தில்லைக் கோயிலில் சிற்றம்பலத்தான் எப்போது வந்தானோ அப்போதே மாயவனும் அங்கே வந்திருக்கவேண்டும். (அணிமுடி ஆதி அமரர் கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து – என்றும் எழுதியவர் வாதவூரர் என்பதை நினைவுகொள்ளவேண்டும்)

தில்லையில் பாடிய திருக்கோவையில் வரகுணன் பற்றிப் பாடினதால் அவன் மதுரையை ஆண்ட வரகுணபாண்டியனைப் பற்றித்தான் பாடினார் என்று பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் வரகுணன் எனும் ஒன்பதாம் நூற்றாண்டு பாண்டிய மன்னரைப் பற்றிப் பாடியவர், தனக்கு மிகவும் பிடித்தமான மதுரையம்பதியில் நிகழ்ந்த மாபெரும் வரலாற்றுச் சம்பவம், அதுவும் வரகுணனின் முப்பாட்டனார் கூன் பாண்டியனும், அவன் மனைவி, மங்கையற்கரசியும் சம்பந்தப்பட்டது, அதுவும் இறைவன் அருள் பெற்ற ஞானசம்பந்தர் சம்பந்தப்பட்டது பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

திருக்கோவையில் எழுதப்பட்ட வரகுணன் பற்றிய சம்பந்தத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1) வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத் தான் (8-19-8 திருக்கோவை)

வரகுணன் எனும் தென்னவன் ஏற்றிப் போற்றும் தில்லை சிற்றம்பலத்தான் (சுருக்க விளக்கம்)

2) மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டு (8-23-12)


(கயல் மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த – சுருக்க விளக்கம்) – நன்றி தேவாரம் தளம்.

முதலில் வந்த வரகுணன் தென்னவன் புகழும் சிற்றம்பலத்தான் எனவும் இரண்டாவதில் வந்த வரகுணன் இமயத்தில் அல்லது ஏதாவது இமயமலையை ஒத்த ஒரு பெருமலையில் மீன் சின்னத்தை வைத்தது என்பதனைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆராய முன்வரவேண்டும். முதலாம் வரகுணன் என்ற பாண்டியன் பெருவீரன் ஆனால் அவன் காலத்தில் காவிரிக்கு வடக்கே பெரும் சக்தியாக இருந்த பல்லவரை மீறி அவனால் வடக்குப் பகுதியை தாண்டமுடியாது என்பது ஒருபுறம், இந்த முதலாம் வரகுணனின் பேரன் இரண்டாம் வரகுணன் சில போர்களில் தோல்வியைத் தழுவினான் என்பதும், இரண்டாம் வரகுணன் காலத்துக்கு சற்று முன்பே விஜயாலய சோழன் தஞ்சையை கம்பவர்ம பல்லவனிடமிருந்து கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த காலம் என்பதையும் சரித்திரம் சொல்கிறது. (சமீபத்திய கண்டுபிடிப்பான இந்தளூர் செப்பேடுகள் தஞ்சையை கம்பவர்மனிடமிருந்து விஜயாலயன் மீட்டதாக சொல்கிறது. இது புத்தம் புதிய தகவல் என்பது ஒருபுறமிருக்க பழைய சரித்திர ஆசிரியர்கள் தஞ்சையை முத்தரையனிடமிருந்து விஜயாலயன் மீட்டதாக அத்தனை புத்தகங்களிலும் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்). இதே இரண்டாம் வரகுணன் காலத்திலேயே சோழ அரசன் முதலாம் ஆதித்தன் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று சோழ ராஜ்யத்தை மிகப்பெரிதாக விரிவுபடுத்தினான் என்பதையும் அதே சரித்திரம் சொல்கிறது.

இந்தத் தகவல்களில் இருந்து தில்லையில் இருந்த வாதவூரர் ஒன்பதாம் நூற்றாண்டு வரகுணனைத்தான் பாடி இருக்கிறாரா அல்லது பொதுவாக சத்குணமுள்ள பாண்டிய அரசன் (யாரோ முற்காலப் பாண்டியனாகவும் பொருள் கொள்ளலாம்) என்று சொல்லியிருக்கிறாரா என்பது இங்கு கூர்மையாக நோக்கத்தக்கது. ஒரு வரகுணன் என்ற வார்த்தையைக் கொண்டு இன்னும் அவர் ஒன்பதாம் நூற்றாண்டவர்தாம் அல்லது தேவார மூவர் காலத்தவருக்குப் பிற்பட்டவர் என முடிவு கொள்வது சரியானதுதானா என்பதை நோக்கவேண்டும்.

ஏற்கனவே பாவைப்பாடல்களின் வித்தியாசங்களைக் கொண்டு ஆண்டாளும் மாணிக்கவாசகரும் பாடியதால் இருவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பதைக் குறிப்பிட்டோம்.

சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் வாதவூரர் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் விவரமாகத் தகவல்களைத் தெரிவித்தோம்.

சீர்காழியை பிரமபுரம் என்றோ சீர்காழி என்றோ குறிப்பிடாது அதன் பழைய பெயரான கழுமலம் என்று வாதவூரர் சொல்லியிருப்பதையும் தெரிவித்தோம். கழுமலப்பதி என்பது ஞானசம்பந்தரின் சீகாழிப்பதி பாடல்களில் அடிக்கடி வரும். அதே போல குத்தாலம் (மயிலாடுதுறை-திருவாவடுதுறை மத்தியில் வரும் தலம்) என்ற ஊரின் பழைய பெயர் துருத்தி என மாணிக்கவாசகர் குறிப்பிட்டதையும் தெரிவித்தோம். மாணிக்கவாசகர் எழுதிய சில ஊர்கள் அப்பர் சுவாமிகளாலோ, அல்லது சுந்தரர், சம்பந்தர் பெருமானாலோ பாடப்படாததையும் தெரிவித்தோம்.

வாதவூரும், திருப்பெருந்துறையும் மிகப் பழமையான ஊர்கள் என்பதையும் தெரிவித்தோம்.

வாதவூரரின் தமிழைப் பற்றிய பல குறிப்புகள் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் தமிழில் அவர் தந்த சில சிறப்புச் சொற்களையும் பிரித்துக் கொடுத்துள்ளோம். வடமொழி கலப்பினால் காலத்தைக் கணக்கிடமுடியாது என்பதையும் விவரித்தோம்.

அதே போல புத்தபிக்குகளுடன் வந்த மன்னன் சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிவித்தோம். புத்தசமயத்தினர் வந்த காலம் பிற்கால சோழர்களின் ஆரம்ப காலம் என்று கணக்கிடுவதில் உள்ள சிக்கல்களைத் தெரிவித்தோம். மாணிக்கவாசகர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராயின் அந்தச் சமயத்தில் சோழர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் அந்த இலங்கை அரசனை இப்படி அனுமதித்திருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகின்றதல்லவா. ஆனால் அதே பிக்குகள் மூவருக்கு முந்திய நூற்றாண்டுகளில் வந்திருக்க அநேக வாய்ப்புகள் உண்டு. காரணம் தமிழகத்தில் சிதறிக் கிடந்த அரசுகள் பற்பல. அப்பர் காலத்தில்தான் (ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம்) தமிழகத்தின் வடக்கே மகேந்திரபல்லவனும் தெற்கே க்டுங்கோன் பாண்டியனும் சிறிது சிறிதாக தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தனர். சோழர்கள் பூரணமாக வலுவிழந்திருந்த காலகட்டம். இந்த சிற்றரசர்கள் முழுசுதந்திரத்தோடு ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தின் தில்லைப்பகுதியில் ஆண்ட ஏதாவது ஒரு சிற்றரசன் ஆதரவில் புத்தமதத்து பிக்குகளும், சிங்கள அரசனும் வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஏற்கனவே தில்லையம்பதி என்பது மிகப் பழைய பதியானது என்பதும் குறிப்பிட்டோம். சமீபத்தில் மடலிட்ட திரு தியாக சத்தியமூர்த்தி (தொல்பொருள் ஆய்வாளரும், தொல் ஆலயங்களைப் பாதுகாக்கும் ரீச் அமைப்பின் தலைவர்) அவர்கள் சென்னை அருகே சாளுவம்குப்பத்தில் பழைய முருகன் கோயில் ஒன்றினை அகழ்வாராய்ச்சியின் மூலம் உலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். இந்தக் கோயில் சங்ககாலத்தைச் சார்ந்ததாகும். தில்லை, திருவரங்கம் போன்ற கோயில்கள் ஆகமம் எனும் சாத்திரம் கோயில்களுக்கு வரும் காலத்துக்கு முன்பேயே இருந்திருக்கின்றன என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

முடிவாக மாணிக்கவாசகர் காலம் பற்றி மாணிக்கவாசக சுவாமிகளின் இனிய பாடல்கள் மூலமாகத்தான் பயணம் செய்து இக்கட்டுரையை எழுதிவருகிறோம் என்பதை ஒருமுறை கவனத்தில் கொண்டுதான் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட பல சிறப்புகள் கொண்ட இந்த தில்லை மூதூரில் ஏன் மாணிக்கவாசகர் தேவார மூவர் காலத்துக்கு முன்பேயே வந்திருக்க முடியாது?

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்!!


அன்புடன்

திவாகர்.

(நன்றி! முதலில் நாசா டாக்டர் நாக கணேசனுக்கு. என்னைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் அவர்தான். அவரால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மாணிக்கவாசகரிடம் எம் சிந்தையைப் பறிகொடுத்து உருகிய பேரினபம் கிடைத்தது. கட்டுரையை அவ்வப்போது படித்துக் கருத்துகள் தெரிவித்த சான்றோர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி. இக் கட்டுரைகளை உடனுக்குடன் படித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.)

Wednesday, September 07, 2011

6.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா



வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே


இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது. வானுயர்ந்த வள்ளலே அப்படி எழுதும்போது மாணிக்கவாசகரின் தமிழைப் பற்றி நம்மால் என்ன எழுத இயலும்... திடீரென, வேண்டாத வேலையாக அவர் காலத்தைப் பற்றிப் பேசப் போக அந்த வேலை இதோ தேன் கலந்து, பால் கலந்து, பழம் கலந்து ஒரு நற்கரும்புச்சாற்றை அருந்துவதில் கொண்டு வந்துவிட்டது. இந்தச் சுவை மது மயக்கம் போலவும் இருப்பதால் நாம் இங்கு ஏற்றுக் கொண்ட நம் கடமையை உணர்ந்து மயங்காமல் இருக்கவேண்டிய கவலையும் கூடவே இருப்பதாலும், நமக்குத் தேவையானதைப் பற்றி மட்டும் எழுதுவோம்.

வாதவூரர் பாடிய திருவாசகத்தில் திருச்சிற்றம்பலக்கோவை எனும் நானூறு பாடல் கொண்ட துறைப்பாடலும் சேர்த்திதான். ஆனாலும் திருவாசகத்தின் ஏனைய பாடல்களுக்கும் திருக்கோவைக்கும் சில வித்தியாஸங்கள் உண்டு. திருக்கோவையைத் தவிர்த்து திருவாசகப் பாடல்கள் அத்தனையும் எளிமை வாய்ந்தது. உரையாசிரியர்களின் உதவி தேவைப்படாது. அந்தப் பாடல்களை இரண்டு மூன்று முறை படித்தாலே பாடலின் பொருள் புரிந்துவிடும். பக்தி இலக்கியங்களிலேயே மிக எளிதான தமிழ் கையாளப்பட்டது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்தான். அந்த எளிமை ஒன்றே பாமரன் முதல் வெளிநாட்டினர் வரை அந்தத் தெய்வத் திரு வாசகங்களுங்கு அடி பணிந்து மனம் உருகி ஏங்க வைத்து என்னென்னவோ செய்தது.

ஆனால் திருக்கோவை அப்படி எளிமையானது அல்ல. நிச்சயமாக உரையும், கூடவே ஆழ்ந்த விளக்கம் அளிக்க தமிழறிஞரும் தேவை. தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் திருவாசகத்தின் ஒரு புத்தகத்துக்கு ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார். "மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாகவைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்." அதே போல இன்னொரு கட்டுரையில் சேக்கிழார் அடிப்பொடிகள் திரு தி.ந. ராமச்சந்திரனார் எழுதுகையில் ”கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் "ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்"23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார்.இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப்படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என்று கூறுகிறார்.

திருவாசகம் எளியவர்க்கென்றால் திருக்கோவை புலவர்களுக்கு. மாணிக்கவாசகரின் மதிப்பு வெகுஜன மத்தியில் மட்டுமின்றி சான்றோர் மத்தியிலும் பரவ இறைவன் செய்த ஏற்பாடு. திருக்கோவையை அவனே கேட்டுப் பெற்றது ஏன் என்பது திருக்கோவையைப் படித்துப் பயன் பெற்றார் மட்டுமே அறியமுடியும்.

இந்த வேறுபாட்டினை எந்த தெய்வப்புலவரும் நமக்குத் தந்ததில்லை. தமிழை நமக்குத் தந்த மதுரையில் பிறந்த தமிழனான வாதவூர் நாயகர் மக்கள் உய்வுற எளிய தமிழில் திருவாசகத்தையும் இறைவன் செய்கையால் சான்றோர்க்கென திருக்கோவையும் எழுதியது என்பது சாதாரணமான செயல் அல்ல.

மாணிக்கவாசகர் தமிழில் பல வடமொழிக் கலப்பு இருந்தாலும், கி.மு.க்கு முன்பு பாடப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் ஐம்பெரும் காப்பியங்களிலும் கூட வடமொழிக் கலப்பும் வடபுலத்தார் புராணக்கதைகளும் ஏராளமாகவே காணக்கிடைப்பது நாம் நன்கு அறிந்ததாகும். அதே சமயத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு என்பது தெய்வ இலக்கியங்களில் மேலும் தமிழுக்கு வனப்பும் எளிமையும், ஆழ்ந்த பொருள்களையும் அள்ளித் தருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். ஆகையினால் வடமொழி கலப்பு இருக்கும் தமிழைக் கொண்டு நாம் காலத்தை கணக்கிடமுடியாது.

தமிழ் தேனினும் இனிய மொழி. இந்த மொழியில் இலக்கண வகையறாக்கள் எந்தக் காலத்திலுமே மாறுவதில்லை. யாப்பும், எதுகை மோனையும் எந்தக் காலத்திலும் கவிதை இலக்கணத்துக்கு ஒன்றுதான். ஆனால் வார்த்தைகள், சொற்கள் புழங்கப்படுவது காலத்துக்கு ஏற்ப மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றது. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது. பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. சங்ககாலப் பாடல்கள் பலவற்றைப் புரிந்து கொள்வது கஷ்டம். தொல்காப்பியத்துக்கு சிறந்த உரை இருந்தாலன்றி அது விளங்காது, ஆனால் சிலம்பும், மணிமேகலையும், பிற்காலச் சங்கப்பாடல்கள் (நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால் நாராய் – பிற்காலச் சங்கப்பாடல்) இவை அனைத்தும் இரண்டு மூன்று முறைப் படித்துப் பார்த்தால் விளங்கும். பிறகு உரையுடன் படித்தால் இன்னமும் அதிகமாகப் புரியும். தேவாரப் பாடல்களிலேயே காரைக்கால் பேயம்மை, ஷேத்திர திருவெண்பா போன்ற பாடல்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் அளவுக்கு மூவரின் பாடல்களில் அவர்கள் பயன்படுத்திய சில பல சொற்கள் சாதாரணமாகப் புரியாது. முதலாழ்வார்களான பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் பாடல்கள் மிக மிக எளிமை. அவை புரிந்த அளவு நம்மாழ்வார் பாடலையோ திருமங்கை மன்னர் பாடல்களையோ சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது.

இந்த வார்த்தைகள் மாறும் விந்தையை நம் வாழ்நாளிலேயே காண்கின்றோம். நம் பாட்டன் பயன் படுத்திய பல சொற்களை நம் சந்ததியினருக்கு சொல்லித்தருவதில்லை. சில சொற்கள் சென்ற நூற்றாண்டுக்குப் பொருந்தியது. ஆனால் இந்த நூற்றாண்டில் பொருந்துவதில்லை. நாற்றம் என்று நல்வாசனைக்குப் பொருள் கொண்டோம் ஒரு காலத்தில். இப்போது நாற்றம் என்பதே அவப் பெயராகிவிட்டது. காலப்போக்கில் பல வார்த்தைகள் தடம்புரள்வதும், மறைந்து காணாமல் போவதும், சகஜம்தான். எழுத்தாளர் சுஜாதா முதலாழ்வார் பாடிய வெண்பா பாடல் ஒன்றில் ‘ஓர்’ என முடியும் சொல் இப்போது மலையாளத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்கிறார். பகவத் கீதை என்னும் சொல்லை தமிழில் ஆழ்வார்கள் அப்படியே எழுதியதில்லை. நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்றாலே போதுமென்பார் (’வார்த்தை’யறிபவர் மாயவற்கன்றி யாவரோ). ஆண்டாள் கீதைக்கு புதுவிதமான தமிழ்ப்பெயர் கொடுத்தாள். மெய்ம்மைப்பெருவார்த்தை என்று சொன்னாள். (மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுச் சித்தர் கேட்டிருப்பர்). அவர்கள் காலங்களில் அப்படித்தான் பகவத் கீதை அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.. ஆகையினால் அந்த ‘வார்த்தை’களைப் பயன்படுத்தினர். வாசலில் இப்போது கோலமிடப்பயன்படும் கோலமாவுக்கு ஆண்டாள் காலத்தில் ‘வெள்ளை நுண்மணல்’ என்று பொருள் (வெள்ளை நுண்மணற்கொண்டு தெருவணிந்து - நாச்சியார் திருமொழி). இப்படிக் காலத்துக்குக் காலம் மாறுபடும் சொற்களில் தேடுதலுக்காகவும் ஆராய்வதற்காகவும் மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து தேடி எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் சில தனித்தமிழாய் இன்றும் பொலிந்திருக்கலாம். ஆனால் நம் கண்ணில் சிக்காமல் போனதால்தான் இங்கே போடப்படுகிறது என்பதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கது.

பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே

>நரிப்பாய் என்றால் இகழ்வான என்ற பொருள்.

தூவண மேனி காட்டிய தொன்மையும்

>தூவணம் என்றால் பொன்

அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்

>கழுக்கடை என்றால் சூலப்படை

நடப்பன நடாஅய்க் கிடப்பன
நிற்பன நிறீஇச் (திருவண்டப்பகுதி 109,110)
முறையுளி ஒற்றி முயன்றவர் (திருவண்டப்பகுதி)

முறையினால் என்பது முறையுளி – இதில் உளி என்பது மூன்றாம் வேற்றுமையில் வந்த இடைச்சொல். திருக்குறளில் “இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட
பெயலும் விளயுளும் தொக்கு” என்ற ,குறளில் இயல்பு-உளி என பரிமேலழகர் உரை உளியை இடைச்சொல் என்கிறது. திருமுருகாற்றுப்படையில் ”மந்திர விதியின் மரபுளி வழாஅ” இதில் கூட மரபு-உளி இடைச் சொல்லாக உரையாசிரியர் உ.வே.சா குறிப்பு.

“ஒளிக்கும் சோரனைக் கண்டனம்.”

சோரன் என்பது கள்ளன் எனப் பொருள் தருகிறது. உயிருக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்ளனான இறைவனைக் கண்டோம். இதே சோரன் அல்லது சோரம் என்பது தற்காலத்தில் வேறு பொருளாகப் பாவிக்கப்படுவது அறிக..சோரம்போதல்>>

மேலும் ‘பிணையல்’ (கால்களுக்கிடையே போடப்படும் சங்கிலி), ’கோற்றேன்’ – கோல்தேன் அதாவது கொம்புத்தேன். ’நள்ளுநீர்’ நடுக்கடல் நீர், (முழுமதி நிலவில் நடுக்கடலில் பொங்கும் நீர்)

அலைகடல் மீமிசை நடந்தாய் (போ.திருவகவல்)

அலைகின்ற கடலின் மேல் மேற்பட நின்று நடந்தாய்

பாவகம் பல பல காட்டி

பாவகம் என்பது முகபாவத்தைத்தான் என்றாலும் நாடகத்தையே பாவகம் என மாணிக்கவாசகர் எழுதினார் என்கிறார் உரையாசிரியர். நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் பொதுப்பெயராக பாவகம் இருந்திருக்கவேண்டும்.

திருவாசகத்தில் இப்படி ஏராளமான காலத்தால் மாறுபட்ட சொற்கள் உள்ளன. அது போல திருக்கோவையிலும் ஏராளமாக உள்ளன. திருக்கோவையாருக்கு 1800களில் ஆறுமுகநாவலர் முதன் முதலாக ‘பேராசிரியர்’ என்பவரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டார். திரு தி.வே கோபாலய்யர், திரு தி.ந.ராமச்சந்திரன் இருவருமே இந்தப் பேராசிரியர் உரையைப் போற்றுகின்றனர். அவர்கள் கட்டுரைப்படி கீழ்க்கண்ட சொற்பிரயோகங்கள் வித்தியாசமாக திருக்கோவையில் இருப்பதைக் காணலாம்.

பொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை,

முத்தமணல் 273 - முத்துப்போன்றமணலையுடைய இடம்

எற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்

சந்தமால் அவர்மேவிய சாந்தமே - 44-1

ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - 101 – 11

மூரி - எருது - மலையாளச்சொல் - 17-4

அண்ணா - தந்தையே - திசைச்சொல் - 55-5

பொக்கு - பொய் - திசைச்சொல் - 61-10

கனகமூக்கு - பொன்மூக்குமின் - 35-8

முகை - காய்அரும்பு 2-4

மொட்டு - முற்றிய அரும்பு - 2-4

பிஞ்ஞகன் - மயிற்பீலியை அணிந்தவனாகிய சிவபெருமான் - 5-6

கோட்டகம் - வயலின் புறத்தே நீர் தேங்கியருக்கும் இடம் - 6-2

கட்டங்கம் - யோகதண்டம் - 9-4

முரறுதல் - மூக்கினால் ஒலித்தல் - 14-4

தொகுத்தல் - பலவாய்க் கிடப்பவனவற்றை ஒருமுகப் படுத்திச் சேர்த்தல் - 23-6

சாலம் - ஆலமரம் - 32-4

மாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும்

முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16

235ஆம் பாடலில்`நலச்சேட்டைக் குலக்கொடியே'

தேம்பல் நுண்ணிடையாள் - 2-11

இப்படி காலத்துக்கேற்ற வகையில் உள்ள தமிழ்ச்சொற்கள் ஏராளமாக இருக்கும்போது இவை எந்தக் காலத்தில் அதிகமாக சான்றோர்களால் பழக்கத்தில் இருந்தது என்பதை மேலும் சில பக்தி இலக்கிய நூல்கள் மூலம் ஆராயவேண்டும். செந்தமிழில் வல்லமையற்ற நான் மேலே கொடுத்திருப்பது வெறும் உதிரிப்பூக்களான செய்திகள் மட்டுமே.. அதைத் தொகுக்கும்போது, பல்வேறு காலகட்டத்து நூல்கள் மூலம் ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம். இது தமிழறிஞர்கள் கையில் இருக்கிறது. அது சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, அல்லது பிற்காலத்து கம்பராமாயணமாக இருந்தாலும் சரி, இந்த சொற்கள் காலநேரத்துக்கு ஏற்றாற்போல சங்கமிக்கும்போது நிச்சயமாக விடை கிடைக்கும்.

மாணிக்கவாசகர் காலத்தில் மேலும் சிலர் பாடல்கள் இயற்றியிருப்பதை அவர் பாடல் வரிகளே சொல்கிறது.

92-11. அருந்தமிழ்மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே

இந்த அருந்தமிழ் மாலைகள் எந்தப் பாடல்கள்? பேயம்மை பாடல்களா, பேயாழ்வார் பாடல்களா, சிலப்பதிகாரப்பாடல்களா அல்லது தேவாரப் பாடல்களா, ஆண்டாள்-பெரியாழ்வார் பாடல்களா என்பதையும் ஆராயவேண்டும். பாவைப் பாடல்களை ஆண்டாளும், மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்கள். ஆண்டாள் காலம் கி.பி. 8 அல்ல்து 9ஆம் நூற்றாண்டு என்பர். இருவர் பாடல் வகைகளையும் சற்று மேலோட்டமாக கண்ணோட்டமிடுவோம்.

பாவைப் பாடல்கள் என்பது சங்க காலம் தொட்டு இளங்கன்னியரால் மணலில் பாவை எனும் பொம்மை செய்யப்பட்டு பின் நீர் விளையாடுதல் எனவாக வருகிறது. ஆப்படி நீராடும்போது பாடும் பாடல்களே பாவைப்பாடல்களாகும். இந்தப் பாவை விளையாட்டோடு கூடிய இளங்கன்னியர் நீராடல் சமயச் சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூறு 181 ஆம் பாடலில் ,

‘நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்
கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்

(நன்றி! ஓம்சக்தி மாத இதழ்)

பாவை பாடல்கள் ஆண்டாள் பாடியதும் மாணிக்கவாசகர் பாடியதும் ஏறத்தாழ ஒரே வகையில் இருப்பதைப் போலத் தோன்றும்.. அடிப்படை ஒன்றுதான். பாட்டுடைத் தலைவன் ஆண்டவனே ஆனாலும் பாடல் வரிகளைப் படைப்பதிலும், பொருளிலும், சொற்பிரயோகத்திலும் அதிக வித்தியாஸங்களைக் காணலாம்.

திருப்பாவை: பாவை நீராடல் (அல்லது மார்கழி நீராடல்) என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டு, கண்ணன் பறை ஒன்று தருவதாக வாக்களித்துள்ளான் என்பதற்காக பாவை நோன்பு செய்வதற்கு, விரதமிருந்து அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக் கூட்டிபோய், பிறகு கண்ணன் அரண்மனைக்குச் சென்று அங்கு ஒவ்வொருவரையும் எழுப்பி கடைசியில் கண்ணனையும் எழுப்பி தம்மோடு அழைத்துச்சென்று தம் நோன்பினையும் முடித்து கண்ணனுக்குக் காலாகாலமும் சேவை செய்வதே வரமாக அவனிடம் கேட்டுப் பெறுவதாகும். ஆனால் இங்கே அதிகப்படியாக பாவை நோன்பு என நோற்கப்பட்டு சங்க கால பாவை வழக்கத்திலிருந்து மேலும் விரிவு பெற்றதாக அமைகிறது.

திருவெம்பாவை: காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலாவிநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல். முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப்பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை.

இருவர் பாடிய பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பாடலில் வெளிப்படையாகத் தெரியும் – எல்லே இளங்கிளியே என்னும் திருப்பாவையும் (15), ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ என்ற திருவெம்பாவை (4) பாடலும் ஒரே பொருளைக் குறிக்கும் பாடலாகும். ஆனால் இந்த ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு இரண்டு தொகுதிகளையும் நாம் ஒப்புவமை செய்திடமுடியாது. ஏனெனில் இறைவனைத் தோழமையாய்ப் பார்த்து அவனுக்கே சேவை செய்யவேண்டிக் கேட்பது திருப்பாவையின் முடிவு. திருவெம்பாவை இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த பரம்பொருளின் பாதங்களைப் போற்றுவதில் முடியும்.

திருவாசகத்தில் பாமரமக்களுக்கான பாடல்களில் திருவெம்பாவையும் ஒன்றாகும். அது மட்டுமல்ல. தன்னைக் காதலியாக பாவனை செய்துகொண்டு கன்னியர்கள் ஒருவருக்கொருவர் பாடிக்கொள்ளும் சுண்ணம் கொட்டுவது, அம்மானை பாடுவது, பூ கொய்வது இவைகளெல்லாம் எளிய நாட்டுப்புறப்பாடல்களைப்போல பாமர மக்களுக்காகவே வடிக்கப்பட்டதோ என்ற வகையில் அங்கே பாட்டுடைத்தலைவனாக் இறைவனையும் வைத்துவிட்டு மக்களிடையே தெய்வபக்தியை தம் எளிய தமிழால் பரப்பிய வாதவூரடிகளை என்ன சொல்லிப் புகழ்வது. அவர் எழுதிய திருவாசகத்தின் பொருள் கேட்கும்போது கடைசியில் அதன் பொருளே அந்த தில்லையம்பலத்தான் என்பதாக அவனைச் சுட்டிக் காட்டி அவனுள் மறைந்த அந்த அருட்செயலை எப்படிப் போற்றுவது.

தமிழை இன்னமும் நாம் தாய்க்கு சமானமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் மாணிக்கவாசகரோ தாயினும் பல மடங்கு இனிய இறைவனுக்கே சமானமாக தம் தமிழை வைத்துப் போற்றி இருக்கிறார்.

பால்நினைத்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்


அடடே, குழந்தைக்குப் பசி நேரம் வந்துவிட்டதோ என்னவோ என்று நினைத்து உருகிப்போய் கருணையோடு பாலூட்டும் அன்னையை விட பலமடங்கு பக்தர்கள் மேல் பரிந்து வரும் இறைவனாகிய நீ எம்மை உருக்கி, உள்ளத்துள் ஒளியைக்கூட்டி, தூய்மையான இனிய ஆனந்தத்தேனையும் அளித்து....இப்படிப்பட்ட என் செல்வமே, சிவபெருமானே நான் உன்னையே தொடர்ந்து ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டேன்..

அடுத்தப் பதிவில் முடித்து விடுவோம்.

அன்புடன்

திவாகர்

Monday, September 05, 2011

5.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா



சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க


மாணிக்கவாசகரின் மேற்கண்ட பாடலைக் கவனித்தால் போதும். சித்தத்தால் எத்தனைதான் சிந்தித்தாலும் அந்த இறைவன் நமக்கு வரக்கிடைக்கமாட்டான். அதே சமயத்தில் சாதாரண எளியவகையில் பக்தி செலுத்தினால் போதும். அவனே, தானாக வந்து நாம் விரித்துள்ள பக்தி வலையில் சிக்கிக்கொண்டு நமக்கு எல்லா வகையிலும் துணை நிற்பான். அவன் ஒருவனே இறைவன்.

இதுதான் மாணிக்கவாசகரின் எளிமையான தெளிவான தெய்வக் கொள்கை. ‘அன்பினில் விளைந்த ஆரமுதை’ என இறைவனை அழைக்கும் இந்த மாமனிதரை அன்பெனும் வளையத்தில் மட்டுமே கட்டிப் போட்டுக் காண முடியும். இப்படிப்பட்ட மகானை எந்த மதத்திலும், எந்தப் பிரிவிலும் சிக்க வைக்க முடியாது.

மாணிக்கவாசகர் பக்தியோகத்தை மட்டுமே பரப்ப வந்த மகான். மாணிக்கவாசகர் ‘காளாமுக சைவப் பிரிவினர் என்பார் சிலர். காளாமுகச் சைவத்தின் ஒரு பிரிவின் மரபு ராஜராஜ சோழனாலும் அவன் மகனாலும் போற்றப்பட்டு வந்தது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. காளாமுகச் சைவத்தின் ஆதி முகம் குஜராத்திலும் காசியிலும் காணப்பட்டுப் பின் பல நூற்றாண்டுகள் கர்நாடகத்தில் போற்றப்பட்டு வந்தது என்பது சரித்திரபூர்வமான தகவல்கள். குஜராத்தில் உள்ள லகுளீசர்கள் சைவத்தின் இந்தப் பிரிவில் ஆகமங்களை சீரமைத்தார்கள். ஆனாலும் இந்த அமைப்பு ஒரு சில விஷயங்களில் மட்டுமே தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தது என்பதற்கு ராஜராஜசோழன் கல்வெட்டுகள், ராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ராஜராஜ சோழன் ‘தெய்வமான’ சமாதி வழிவகைக்கு இந்த சமய ஆகமங்கள் உதவின என்பதையும் இந்தக் கல்வெட்டுச் செய்திகள் விவரிக்கின்றன. இன்று இன்னமும் காசியில் காளாமுகப்பிரிவினர் இறுதிச் சடங்குகளுக்கு மிகவும் உபயோகப்படுகின்றனர். விஷயம் தெரிந்த சைவச் சான்றோர்கள் இம்முறையை தம் இறுதிக் கால நிகழ்வுக்கு இன்னமும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் வாஸ்தவமே, ஆயினும் மாணிக்கவாசகரை இப்பிரிவில் சேர்க்க எந்த வகையிலும் அவர் பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.

மாறாக வேதமதத்து கன்ம காண்டத்தை விமர்சிக்கும் வார்த்தைகள்தான் உள்ளன. போற்றித் திருவகலில் மாணிக்கவாசகர் மனிதர்களாகிய நாம் பிறந்து வளர்ந்து அப்படி வளரும்போது நமக்கென இயற்கையாக வரும் கஷ்டங்களையெல்லாம் தவிர்த்து முடிவில் தெய்வத்தைத் தொழும்போது நம்மை மதமென்னும் மாயாசக்திகள் எப்படியெல்லாம் நெருக்குகின்றன என்று சொல்வார்:

தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி
முனிவிலாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின

விரதமே பரமாக வேதியருஞ்
சரதமாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதமென்னுஞ்
சண்டமாருதஞ் சுழித்தடித்தாஅர்

”தெய்வம் என்ற சித்தம் மனதில் தோன்றியவுடன், அது என்ன என்பதற்காக நம் மனதை ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு பாதையில் இழுத்துச் செல்லத் தொடங்கினர். வேதத்தில் உள்ள கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விரதங்களும், யாகங்களுமே பரமானது, முடிவானது என்று வேதியர்கள் சாத்திரங்களாகக் காட்டுவர். ஒவ்வொரு சமயவாதிகளும் தாம் கொண்ட சமயமே உண்மையான சமயம் என்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றுவர். மிகுதியான மாயாவாதம் என்கிற வாதங்களால் பெரும் சூறாவளிபோல சுழன்று நம் அறிவை ஆக்கிரமிப்பார்கள்” (சுருக்க விளக்கம்).

பார்த்தீர்களா!. இது இன்றளவும் உண்மைதானே.. எந்த மதமும் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புவது எந்தக் கால கட்டத்திலும் இருப்பதுதான் என்பது மேற்கண்ட மாணிக்கவாசகரின் மாணிக்கவரிகளே சாட்சி.

சாக்கியம், சமணம், வேத மதங்களில் உள்ள வேறு வேறு பிரிவுகள் (மீமாம்சை, நாத்திகம், உலகாயுதம்) பாரதம் முழுவதும் மிக அதிகமான அளவில் தங்களுக்குள் சண்டையிட்ட காலங்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரைதான். பாரதம் என வரும்போது இங்கு தமிழகத்தைச் சேர்த்தே பேசுகின்றோம் என்பதை நினைவில் கொள்க.

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர்;

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி

(நாத்திகம் என்பது தமிழகத்தில் வேரூன்றிய ஒரு கொள்கையாகும். சமணர்களை நாத்திகர் என வேதியர் அழைத்தனர். பிராம்மணர்களைக் கண்டாலே ‘விப்ரக்‌ஷயம்’ (பிராம்மணர்கள் அழிக) என்று அக்காலத்தில் சமணர்கள் சொல்லி வந்தார்கள். உலோகயதம் என்பது நாம் கண்களால் பார்க்கும் சம்பவங்களை மட்டும் நம்பி அதனோடு உலாவுவது, அதையே உலகம் என்று நம்புவதும் அதன்படி கண்டமேனிக்கு நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்வதும் ஆகு, இதை, ஒரு கொடிய நாகத்தின் விஷத்துக்கு ஒப்பாகும் என்கிறார் வாதவூரர். ஏழாம் நூற்றாண்டு மகேந்திர பல்லவனின் நாடகமான மத்த விலாசம் படித்தால் அப்போதைய தமிழகக் காலகட்டத்தை ஓரளவு உணர்ந்துகொள்ளமுடியும் – பௌத்தம் வேத மார்க்கத்திலிருந்து திருடப்பட்டது என்பான் அவன்.)

கி.மு ஐந்தாம்-நான்காம் நூற்றாண்டுகளில் பாரதத்தில் வடபகுதியைஆண்ட நவ நந்தர்கள் ஆட்சிக்காலத்திலேயே சமயங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிட்டன. வேதமதம் கூட பல பிரிவுகளைத் தன்னகத்தே கொண்ட சூழ்நிலையும், ஒவ்வொரு பிரிவும் தம் தம் பிரிவுதான் உயர்ந்தது என்ற கொள்கையை மற்றவர் மேல் சுமத்திக் கொண்டு வாழ்ந்த காலகட்டங்கள் அவை. பின் வந்த சாணக்கியர் எனும் அந்தணரால் மௌரிய வம்சம் ஸ்தாபிக்கப்பட்டாலும் மன்னர்கள் அனைவருமே தத்தமக்குப் பிடித்த மதத்தைக் காப்பாற்றுவதிலேயே சித்தமாக இருந்தனர். மௌரிய அரசன் அசோகன் புத்த மதத்தை கலிங்கப்போரின் முடிவில் தழுவியதாலும், கலிங்கத்தை ஆண்டு வந்த சமணமத அரசனையும், மக்களையும் கொன்றதாலும் இதுவும் ஒரு காரணமாக பௌத்த சமண வாதிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தின. போர்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. ஒரு போரின் முடிவை உதயகிரியின் சமணர்கள் கல்வெட்டு (முதலாம் நூற்றாண்டு) இப்படிக் குறிக்கிறது “எதிரிகள் முடிவாக வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டனர்” . இங்கு எதிரிகள் எனக் குறிப்பிடப்படுவது பௌத்தர்களையாகும்.

சமணம் தென்னகத்தில் கர்நாடக மலைகளில் மிகப் பலமாக பிம்பிசாரர் மூலமாக கி.மு. நான்காம் நூற்றாண்டில் அடித்தளம் போடப்பட்டு பின்னர் வலுப்பெற்றதாக சமண சரித்திரம் சொல்கிறது. அதே போல கிருஷ்ணை நதிக்கரையில் தென்பக்கத்தை ஆண்ட சாதவாகன அரசர்கள் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை) பௌத்த மதத்தை முழுமையாகத் தழுவி மிக வேகமாகப் பரப்பியது என்பதும் சரித்திர பூர்வமான ஆதாரமான செய்திகள்தான். நாகார்ஜுனர் எனும் அந்தணர் பௌத்தத்துக்கு மாறி மற்றவர்களையும் மாற்றி பௌத்தத்துக்குப் புது பொலிவு தந்தார். கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் சிறியதாக சிலிர்த்து எழுந்த பல்லவபரம்பரை வேத மதத்தை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்ததையும் அவர்கள் துரோணரின் மகனான அசுவத்தாமரை தம் ஆதி பிதா என்றும் அதனால் அவர்கள் வம்சமே பிராம்மண-க்ஷத்திரிய வம்சம் என்றும் சொல்லிக்கொண்டது. அதே சமயத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொடி கட்டிப் பறந்த குப்த வம்சம் மிகப் பலமாக இருந்து பாரதத்தில் வேத மதத்தை ஒரு தூக்கு தூக்கி எட்டாத உயரத்தில் வைத்துப் போற்றியது.

மேற்கண்ட சரித்திர ஆதாரநோக்கில்தாம் நாம் மாணிக்கவாசகரின் ’போற்றித் திருவகவல்’ குறிப்பிட்ட மேற்கண்ட வரிகளை நோக்கவேண்டும். பௌத்தம் வட தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்களத்தீவினில் மிக அதிகமான அளவில் பரவியதும், சமணம் காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் மெல்ல மெல்லப் பரவி சான்றோர்களைத் தோற்றுவித்து அவர்கள் மூலம் படிப்படியாக தமிழகத்தில் வளர்ந்து வந்த காலத்தையும் நாம் நோக்கவேண்டும். கர்நாடகப்பகுதிகளில் சமணமும், தென் ஆந்திரப்பகுதியிலும், கீழைக் கடற்கரைப்பகுதிகளில் பௌத்தமும் நன்றாகப் பரவின என்பதற்கு இன்றளவும் பௌத்தச் சிலைகளும், இடிந்த பள்ளிகளும் கீழக் கரையோர மாநிலங்களில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன (இன்று ஆந்திர மாநில சுற்றுலாக் கொள்கையில் பௌத்த சுற்றுலா மூலம் வெளிநாட்டினரை இழுக்கும் திட்டம் என்ற ஒன்று இருக்கிறது).

மாணிக்கவாசகர் புத்தபிக்குகளுடன் வாதம் செய்த நிகழ்ச்சி அவர் திருச்சாழல் பாடல்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இலங்கை அரசன் ஒருவன் தன் புத்த பிக்குகளுடன் பெருமளவில் தில்லை வந்து, வாதத்தில் ஈடுபட்டான். வாதத்தின் முடிவில் புத்த பிக்குகளின் கேள்விகளுக்கு, அவர்களின் மன்னரோடு வந்திருந்த மன்னரின் சிறு மகள் அதுவும் ஊமை, அவள் மூலம் பாடல்களாக பதில் கொடுத்ததே திருச்சாழல் பாடல்கள். மாணிக்கவாசகர் ஊமையைப் பாடவைத்தது அந்த மன்னனுக்கு சந்தோஷத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் இறைவனின் புகழுக்கு முன் மதங்களின் கோட்பாடுகள் எடுபடாது என்பதையும் எடுத்துக் காட்டிய பாடல்களாக அமைந்தது. புத்த பிக்குகளின் கேள்வியும், அதற்கான பதிலும் இவ்வாறு அந்த ஊமைப் பெண்ணிடமிருந்தே வரும். இருபது பாடல்களில் ஒரு பாடலை மட்டும் போடுகிறேன் (மாதிரிக்காக).

கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.


(சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்டான். அன்றியும் அவனுக்குத் தாய் தந்தை யரும் இல்லை; இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்று புத்தன் வினாவ, எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், அவன் சினந்தால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்) நன்றி தேவாரம் தளம்.

இந்த வாதம் நடந்த காலத்தை நோக்குகையில் மதங்களுக்கிடையே மிக அதிகமான அளவில் வாதங்கள் நிகழ்ந்த காலமாகத்தான் தெரிகிறது. அதே சமயம் தில்லையில் இந்த வாதம் நடந்துள்ள நிலையில் தமிழ் அரசாங்கம் எந்த நிலையில் அந்தப் பகுதியில் அன்று இருந்தது, யார் ஆண்டனர்.. சிங்களர்கள் தங்கள் மதகுருவை மீறி எதுவும் செய்யமுடியாத நிலை (மகாவம்சம் மூலம்) அன்றும் இன்றுமிருக்க, இந்த அரசன் ஏகப்பட்டவர்களோடு பிக்குகளுடனும், தன் ஊமை மகளோடும் (காவல் படை வீரரும் இருந்திருப்பர்) எப்படி தமிழகம் வந்தான் எனக் கேள்வி எழும்பும். மகாவம்சம் எனப்படுவது சிங்கள நாட்டு சரித்திரம் என்பதை விட புத்த புக்குகள் அவர்களைச் சார்ந்த மன்னவர்கள் கட்டிய விஹாரங்கள் வரலாறாக இருப்பதால் மதத்துக்கெதிரான செய்திகள் (http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/) அங்கு கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, தமிழக வரலாற்று இலக்கியங்கள் இந்த சிங்கள மன்னர்களின் தமிழக வருகை பற்றி ஏதேனும் சொல்கின்றதா என்று பார்க்கலாம்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ, தன் அண்ணனான சேரன் செங்குட்டுவன் பத்தினித்தெய்வத்துக்குக் கோயில் எழுப்பியபோது கயவாகு எனும் மன்னன் அங்கு சோழ பாண்டியரோடு வந்ததாக எழுதியிருக்கிறார் (சிலம்பு 23; 134--7.). சிலம்பில் சொல்லப்படுகின்ற கயவாகு இலங்கை திரும்பிச் செல்லும்போது சக்தி வழிபாட்டையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றதாக சிலம்பில் மட்டுமல்லாமல் சில சிங்களக் குறிப்புகள் கூட உள்ளன. (http://vattappalaikannaki.com/history1.php) இரண்டு இலங்கைக் கயவாகு மன்னர்கள் பற்றி இலங்கைக் குறிப்புகள் உள்ளன. ஒரு கயவாகு முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்பதும், இரண்டாம் கயவாகு 12ஆம் நூற்றாண்டு என்பதும் தெரிய வருகிறது. (http://www.varalaaru.com/Default.asp?articleid=573).

இன்னொரு தமிழ்க்குறிப்பொன்று கயவாகு மன்னர் (http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_neyttanam.htm திருநெய்த்தானம் எனும் தலத்தில் (திருவையாறு அருகே) ஈசனைக் குலதெய்வமாகக் கொண்டார் எனவும் தெரிவிக்கிறது. இதற்குப் பழைய கல்வெட்டு ஆதாரமாக் உள்ளத் எனத் தெரிவித்தாலும் அந்தக் கல்வெட்டு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மாணிக்கவாசகர் இந்த கயவாகு மன்னர் கூட்டத்தினருடன் வாதிட்டாரா என்பது ஆராயத்தக்கதுதான். கயவாகுப் பற்றிய மற்றொரு இலங்கைக் குறிப்பில், தழகத்தில் நடந்த ஒரு போரில் 12000 சிங்களர்களைத் தமிழகத்திலிருந்து விடுவித்து அதற்குப் பதில் 12000 தமிழர்களை இலங்கைக்கு அடிமைகளாக அழைத்துச் சென்றார் என்ற செய்தி (நன்றி: வரலாறு.காம்) ’ராஜவளியா’ என்ற இலங்கை வம்சாவளி நூல் தெரிவிக்கிறது. சிங்களர்கள் தம் வரலாற்றினை கதைகளாக, தமக்குச் சரிப்படத்தக்கவாறு வேண்டிய விதத்தில் எழுதிக் கொண்டதாகவே இருந்தாலும் இதன் ’மூலம்’ உண்மையானது என்ற பேராசிரியர் எஸ். கணேசன் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆக பெரும் குழுவாக அவர்கள் அரசனுடன் வந்திருக்கலாம், ஆனால் அது மனிதர்களைப் பிடிப்பதற்காகவோ, கொண்டு செல்வதற்காகவோ இருந்திருக்கும் என எப்படி சொல்லமுடியும். மகாவம்சத்திலும் ராஜவளியா விலும் சம்பவங்களை திரித்து எழுதுவது என்பது வழக்கம்தான் என்பதை பல சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அந்த கடல்சூழ் இலங்கை மன்னன் (அப்படித்தான் இளங்கோ குறிப்பிடுகிறார்) கயவாகுவின் காலகட்டம் செங்குட்டுவன் ஆட்சி செய்த காலகட்டம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மயிலை நூ த லோக சுந்தரம் அவர்களின் கருத்துப்படி சாரிபுத்தன் எனும் பெயருடைய சிங்கள மன்னன் மாணிக்கவாசகரோடு வாதிட வந்ததாக கடலூர் அருகே உள்ள திருச்சோபுரக் கோயிலில் பழைய கல்வெட்டு சொல்வதாக எழுதியிருந்தார். இதுபற்றிய செய்தியையும் புறந்தள்ளாமல் கல்வெட்டுகளை சற்றுத் தேடிப்பார்த்ததில் எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மாணிக்கவாசகர் பற்றிய சரித்திரபூர்வ ஆதாரமே சமீபத்தில் மாயவரத்துக்கு அருகே, திரு இந்தளூரில் கழுகண்ணிமுட்டம் எனும் இடத்தில் கைலாசநாதர் கோயிலின் அருகே தோண்டும்போது பத்தடி ஆழத்திலிருந்து கிடைத்த சிலைகளுடன் இருந்த மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை ஒன்றுதான். இது கூட சென்ற வருடம் (2010) மே மாதம் 20ஆந்தேதி கண்டெடுக்கப்பட்டது.

சரி, அடுத்த கட்டமாக மாணிக்கவாசகரின் தெய்வத் தமிழ் பற்றியும் பார்ப்போம்.

அதை அடுத்து கடைசிகட்ட பரிசீலனையும் செய்வோம்.

திவாகர்

Labels: ,

Sunday, September 04, 2011

4. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா


கற்றாரும் கல்லாரும் உருகுகவி
வாதவூர் கருணை வள்ளல்


என திருக்குற்றாலப்புராணப்பாடலில் சொல்லியபடி திருவாசகம் எனும் தேன் வாசகம் எம்மைப் போன்ற கல்லாதாரையும் உருகிக் கனிய வைக்கும் என்பதை உணர்ந்ததால், திருவாசகத்தின் தேனைப் பார்த்துக் கொண்டே, அதைப் பருகாமல், இந்தக் கட்டுரைக்குத் தேவையான அங்குள்ள சில தேவையான சொல்வளங்களை மட்டும் இங்கே எடுத்துப் போடுகிறேன்..

நாயினேனை நலமலி தில்லையுட்
கோலமார்தரு பொதுவினில் வருகென (கீர்த்தி திருவகவல்)

எத்தனை அடக்கம் தன்னைப் பற்றி மாணிக்கவாசகருக்கு பாருங்கள். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆதிசிவனையே குருவாகப் பெற்று அவர்தம் வாக்கினால் ’தில்லைப் பொதுமன்றில் தன்னைக் காண வருக’ என்ற கட்டளையை ஏற்று, திருப்பெருந்துறையிலிருந்து தில்லை செல்கிறார் வாதவூரரர். கீர்த்தித் திருவகவல் எனும் அவர் அருளிய பாடல் இறைவனின் அருட்செயலைக் கூறுவதாகும்.

அத்துடன் இந்தப் பாடலில் தன் வரலாற்றையும் ஆங்காங்கே தேன் தூறலாக தூவித் தருகிறார். புரவிகள் வாங்கும் வழியில் இறைவன் ஆட்கொண்டதும், குருவாய் அருள் பாலித்ததும், பாண்டியன் பார்வையில் பல திருவிளையாடல் (பரியை நரியாக்கியது போன்றவை) செய்தும், இறைவன் மாணிக்கவாசகர்தம் மகிமையை உலகுக்குக் காட்டியதும் மிக அழகாக கீர்த்தித் திருவகலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி தில்லை வருகவெனப் பணித்ததும் அவர் தில்லை செல்லும் வழியில் சிவன் அருளிய திருத்தலங்களை வலம் வருகிறார். கீர்த்தி திருவகலே தில்லையில் பாடப்பெற்றதாகும். அவற்றில் பல திருத்தலங்கள் மூவர்களால் பாடப்பட்ட பெருமையைப் பெற்றதாகும் சில திருத்தலங்கள் பெயர் இன்றும் அழிந்தோ மறைந்தோ போயின. அப்படிப் பெயர்கள் மறைந்துபோன ஊர்கள் சில:

கல்லாடம், கோகழி, நந்தம்பாடி,ஓரியூர், சந்திரதீபம், பாண்டூர், சாந்தம்புத்தூர் போன்றவை.

"பூவலமதனிற் பொலிந்தினிதருளி பாவ நாசமாக்கிய பரிசும்" – யான் இந்த பூமியை வலம் வந்து மேற்கொண்ட தலயாத்திரையில் வழிபட்ட தலங்கள் எல்லாம் அழகிய காட்சி தந்து என் பாவங்களை நாசம் செய்த இயல்பு - என்று தில்லையாண்டவனை நோக்கிப் பாடிய வாதவூரார் தமிழகம் மட்டுமல்லாமல் இன்றைய ஆந்திரமாநிலத்தில் உள்ள நல்லமலை வரை சென்று வந்ததையும், மேலைக் கர்நாடக மலை, மற்றும் மேலைக் கடலோரம் போன்றவைகளையும் குறிப்பிடுகிறார். இன்றைய நல்லமலைத் தொடர், கிழக்கு, தென் மேற்காக சென்று சற்று பிரிந்து மேற்குமலைத் தொடரைச் சேர்ந்து இணைந்து கொள்ளும். இந்த நல்ல மலை பழைய காலத்தில் மகேந்திர மலை என்பதாக் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் திருப்பருப்பத மலை என்ப் பெயர் பெற்றதாகவும், பின்னரே நல்லமலை என்ற பெயரில் இருப்பதாகவும் சைவ வரலாற்றுப் புத்த்கங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீசைலம்,, அஹோபிலம், திருமலைக்கோயில்கள் இத் தொடர்மலையில் இருப்பனவாகும்.( The earliest known historical mention of the Hill - Srisailam, can be traced in Pulumavis Nasik inscription of 1st Century A.D.) “மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்” என்று அவர் கீர்த்தித் திருவகலில் ஆரம்பவரிகளில் தொடங்கும்போதே இது புரியும். ஸ்ரீசைலமலைக் கோயில் சரிதத்தில் இறைவன் ஸ்ரீசைலத்தில்தான் அம்பிகையை தன்னிடத்தே கொண்டு உலகையே உற்பவித்தான் என்பதாக வரும். வாதவூரரின் கீர்த்தித் திருவகலில் இளைய வேடன் போல இறைவன் சென்று அங்குள்ள வேட்டுவ மகளாகப் பிறந்த பார்வதிதேவியை மணந்த செய்தி வருகின்றது, இந்தக் காட்சி இன்றைக்கும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவின் போது உறசவவிழாவாக நடத்தப்படுகிறது. பின் அங்கிருந்து கன்னடநாடு என தற்போது அழைக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று வந்ததை ”பஞ்சப்பள்ளியில் பான்மொழி தன்னோடும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் வாதவூரர் குறிப்பிடும் பஞ்சப்பள்ளியும் கர்நாடக பஞ்சஹல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை. இன்றைய பஞ்சிம் (கோவா) முன்னொரு காலத்தில் அக்ரஹாரப் பெயராக பஞ்சஹள்ளி என்று பெயர் பெற்றதாக கூகிளில் ஒரு செய்தி உள்ளது. http://en.wikipedia.org/wiki/Villages_and_Agraharas_in_Goa_and_their_ancient_names

ஆனால் கோகழி என்ற ஊரைப் பற்றிய பழைய செய்திகள் இந்த கோகழி என்பதும் கர்நாடகத்தில்தான் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. கோகழி என்பது ஆந்திரத்தைச் சார்ந்த ஊர் என திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியனார் சொல்வதை வைத்து ஆந்திரத்தில் உள்ள ஒரு சிவத்தலம் என்று சொல்வோரும் உண்டு. கோகழி என்பதன் தமிழ்ப்பதத்தின் பொருள் திருவாவடுதுறையே என்பதால் குடந்தை அருகே உள்ள திருவாவடுதுறையைத்தான் மாணிக்கவாசகர் குறிக்கிறார் என்றும் சில நூல்கள் சொல்கின்றன. ஆனால் இங்கே இன்னொன்றைக் கவனிக்கவேண்டும் கோகழி எனும் ஊரின் சொல்லாட்சி திருவாசகத்தில் ஐந்து இடங்களில் வருகிறது என்பதிலிருந்து கோகழி ஆண்ட குருநாதர் மிக அதிகமாகவே வாதவூரரைக் கவ்ர்ந்திருக்கிறார் என்பதும் புரியும். கர்நாடக மாநிலத்து மேற்குக் கரையோரம் கார்வார் அருகே காணப்படும் ஆத்மநாதர் (முக்திநாதர்) கோயில் கொண்டுள்ள கோகரணமும் கோகழியும் ஒன்றா எனப்தையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பரும் சம்பந்தரும் கோகரணத்தைப் பாடிய பதிகங்கள் உள்ளன. ஆதி காலத்தில் இந்தப் பழைய பதி கோகழி எனப் பெயரில் வழங்கப்பட்டதா என்றும் ஆராய வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் மாணிக்கவாசகர் தமிழ் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பழக்கமான சில சிவத்தலங்களையும் குறிப்பிடுகிறார். திருவாரூர், திருவிடைமருதூர், கடம்பூர், திருவாஞ்சியம், குத்தாலம் (இது துருத்தி என மணிவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது,) சீர்காழி (இது கழுமலம் என்று மணிவாசகரால் குறிப்பிடப்பட்டாலும் திருஞானசம்பந்தரும் சீர்காழியை பல நாமங்களால் தொழும்போது அதில் கழுமலம் என்ற பெயரும் உண்டு), திருவண்ணாமலை, திருப்பராய்த்துறை, திருவெண்காடு, திருவையாறு (இவை சோழநாட்டுத் திருத்தலங்கள்), திருவாதவூர், திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கையூர், திருப்பூவணம், மதுரை, குற்றாலம் போன்ற பாண்டி நாட்டுத் தலங்களும், காஞ்சி, திருக்கழுக்குன்றம், திருவெற்றியூர் போன்ற தொண்டைநாட்டுத் திருத்தலங்களும் அடங்கும், மலைநாடு எனப் பொதுவாக சேரநாட்டை அழைத்தாலும் மலைநாட்டுத் திருத்தலங்கள் ஏதும் காணப்படவில்லை. தேவூர் என்ற ஒருதலத்தில் நடந்த சிவன் திருவிளையாடலைப் பற்றி ஒரு இடத்தில் பாடுகிறார். இது ராமேவரத்தையோ அதன் அருகே உள்ள ஒரு தீவையோ குறிக்கிறது என்பர் சிலர். தேவூர் பற்றியும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

தேவார மூவர் பாடிய மொத்தத் திருத்தலங்கள் 275 தலங்களாகும் இவற்றில் தமிழகத்தில் மட்டுமே 266 தலங்களும், ஆந்திரத்தில் இரண்டும், இலங்கையில் இரண்டும், கருநாடகத்தில் ஒன்றும், வடநாட்டில் நான்கும் அமைந்துள்ளன. மூவர் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்பதும் முன்பே எழுதினோம். அதே சமயத்தில் திருவாசகம் முழுதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஏனெனில் தில்லை இறைவனே முன்னின்று அவர் பாடிய பாடல்களை மறுபடி பாடவைத்து எழுதினான் என்பதை ’வாதவூரர் பாட சிற்றம்பலத்தான் எழுதியது’ என்ற குறிப்பின் மூலம் காணலாம். வாதவூரர் காலத்தில் அவர் சென்ற போது உள்ள கோயில்கள் இத்தனைதானா என்ற கேள்வி கேட்கத் தோன்றும். ஷேத்திரத் திருவெண்பா எழுதிய ஐயடிகள் காடவர்கோன் கூட 23 ஷேத்திரங்கள் பற்றித்தான் எழுதினார், அதில் ஒன்று வடநாட்டு உஜ்ஜயினி கோயில் பற்றியது என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று.

அடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் சமயங்களில் நிலையை பார்ப்போம். மகாபாரத காலத்துக்குப் பிறகு, இப்பூவலகில் எந்தக் காலத்திலும் சமயத்தை அடிப்படையாக வைத்து மனிதர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதோ, உயர்த்திக் கொள்வதோ, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதோ அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அறிந்தோ அறியாமலோ அவன் பிறக்கும்போதே சமய முத்திரையுடன் பிறக்கும் அவலம் இந்த உலகில் இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.

மாணிக்கவாசகர் பாடலிலிருந்தும் அவர் காலத்தில் இருந்த இந்த சமயவேற்றுமைகள் பளிச்செனத் தெரியத்தான் செய்கின்றன.

திவாகர்

(மேலே உள்ள படம் - 1870 ஆண்டைய தில்லை கோயில் - நன்றி விக்கி தளம்.

இன்னும் வரும்

Friday, September 02, 2011

3. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா
”தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்று கீர்த்தி திருவகல் பாடலை ஆரம்பித்துள்ள மாணிக்கவாசகர், தில்லையை ’மூதூர்’ (மிகப் பழைய ஊர்) என இங்கே சிறப்பாக வர்ணித்திருப்பது கவனிக்கத் தக்கது. கடல்கொண்ட தமிழ்ப்பகுதிகளைக் குறிப்பிட்ட இளங்கோ அடிகள் கூட மதுரையை ‘மூதூர்’ என சிறப்பாக அழைத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழகத்தைப் பற்றி கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வரலாற்றினை எந்த சரித்திர ஆசிரியராலும் இந்த நிகழ்ச்சி நடந்தது இப்போதுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாதுதான் (சமுத்திர குப்தன் பல்லவனை வென்றது தவிர). கல்வெட்டுகள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டிலிருந்து அதிகமாக வர வர நாம் சென்றுபோன காலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தோராய அளவில் கணக்கிட்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்துக்கு களப்பிரர் வருகையும் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டு வரை பல சரித்திர ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. களப்பிரர் காலத்தில் சரித்திரசம்பந்தமான எவ்வித ஆதாரமும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமான வகையில் ‘நாவலர் சரிதத்தில்’ ஒரு தகவல் கிடைத்துள்ளது,

மூவேந்தர்களையும் ஒரு சேர வீழ்த்திய களப்பிர அச்சுதராயன் என்பான் ‘தில்லை நகரில்’ முடிசூட்டிக்கொள்கிறான். அவன் அருகே சங்கிலியால் கட்டப்பட்டு சிறைப்பட்ட மூவேந்தர்களும் அவன் புகழைப் பாடவேண்டுமெனக் கட்டளை. சேரன் (தினையும் செந்நெல்லும் நிறைந்த அச்சுதனின் பெரு மாளிகையின் முன்வாசலில் – முற்றத்தில், முரசுகளும் சங்கும் ஊத தேர்களில் வந்த அரசர்கள் அவனுக்காக காத்திருப்பது) எனப் பாடுகிறான். இரண்டாவதாக சோழன், அந்த முற்றத்தில் காணப்படும் அரசர்களின் காலோசை, அந்த முரசுகளின் ஓசையைக்கூட மட்டுப்படுத்தும் என்று பாடுகிறான். ஆனால் பாண்டியன் இவர்களைப் போல ஒரேயடியாகப் புகழவில்லை. மாறாக அச்சுதனை மட்டம் தட்டிப் பாடுகிறான்.

“குறையுளார் எங்கிரார் கூர்வேல் விராமன்
நிறையாறு திங்களிருந்தான் – முறைமையால்
ஆலிக்கும் தானை யலங்குதா ரச்சதமுன்
வாலிக்கிளையான் வரை”
(குறையிலாத மனிதன் யார்? கூர்வேலையுடைய ராமன் வாலியின் இளையோன் சுக்கிரிவனுக்காக ஆறு மாதம் காத்திருக்கவில்லையா. அதேபோலத்தான் நானும் பெரும்படை கொண்ட அச்சுதனுக்காக இங்கே காத்திருக்கிறேன் (சுருக்கமான விளக்கம்)

இந்தப்பாட்டின் பொருளால் தன்னை குரங்கினத்தலைவனுக்கு இணையாகவும், பாண்டியணை ராமனாகவும் வர்ணித்தது அச்சுதனுக்குக் கோபத்தை எழுப்பியது. தண்டனையை அதிகப்படுத்த ஆணையிட உடனே அவனை சாந்தப்படுத்தி இன்னொரு பாடலைப் பாடுகிறான் பாண்டியன்.

“குடகர் குணகடலென்றார்த்தார் குடார்க்
கிடவர் வடகடலென்றார்த்தார் – வடகடல்
தென்கடலென்றார்த்தார் தென் தில்லை அச்சுதன் நின்றன்
முன் கடை நின்றார்க்கு”

ஒரேயடியாக தடாலடிப்புகழ்தான். அதாவது தென் தில்லையில் அச்சுதன் அரண்மனை முற்றத்தில் இருந்த அரசர்கள் எண்ணமாவது இப்படி இருந்ததாம். அச்சுதன் படையைப் பற்றி மேற்கு நாட்டார் ஏதோ படையின் எல்லை கீழ்க்கடல் வரை நீளும் என்றும் தென்கடல்பகுதியின அது வடகடல் எல்லை வரை நீண்டதாம் எனவும் வடபுலத்தாரோ தென்கடல் வரை நீண்டதாக சொன்னார்களாம்..

மூவேந்தர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் இங்கே கவனிக்கப்படுவது தென் தில்லை என வரும் ஒரு சொல். இப்பாடல்களை வைத்து அச்சுதன் மூவேந்தர் முன்னிலையில் தில்லையம்பலத்தான் கோயிலில் முடிசூட்டிக்கொண்டதாக பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது நூலில் எழுதியுள்ளார். மேலும் அச்சுதக்களப்பராயன் பற்றி ‘புத்ததத்தா’ எனும் பௌத்தமதப் புலவர் பாலி மொழியில் மிகவும் புகழ்ந்துள்ளார். அவர் எழுதிய வினய வினிச்சாயா எனும் நூலில் அச்சுதன் தமிழகத்தில் குறிப்பாக சோழப்பகுதிகளை ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (PT Srinivasa Iyengar’s The early History of Tamils).

புவனேஸ்வரம் உதயகிரி கந்தகிரியில் உள்ள கல்வெட்டு (ஒன்றாம் நூற்றாண்டு - மலையின் பாறையின் மேல் விட்டத்தில் பதிப்பித்திருக்கிறார்கள். இன்றும் விவரமாகக் காணலாம்)ஒன்றில் ஒரு பகுதி காரவேல அரசன் தமிழகத்தின் மீது படையெடுத்து 113 வருடங்கள் ஒன்றாய் இருந்த தமிழக மூவேந்தர்களை முறியடித்தது பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கல்வெட்டுச் செய்தியும் அச்சுதக் களப்பராயன் செய்தியும் ஒன்றா அல்லது களப்பிரர் என்பவர் கல்ச்சூரி அல்லது காரவேலர் வம்சமா என்பதும் இன்னமும் நிரூபிக்கமுடியவில்லை.

தில்லையம்பதி மிகப் பழைய ஊர் என்பதில் வாதபேதம் வராது என்றாலும் தில்லையம்பலத்து இறைவன் பற்றிய் செய்திகள் எப்போது வந்தது என்பதைச் சற்று ஆராயவேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு சிற்பம் (மூலம்-விக்கி) என சில சிற்பவரலாறுகள் கூறப்பட்டாலும் அவை சரித்திர நோக்கில் ஆராய்கையில் கால விவரங்களில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஆடலரசனான சிவனை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது..

திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழ லவிழா
துமையவ ளொருதிற நாக வோங்கிய
விமைய னாடிய கொட்டிச் சேதம் சிலம்பு 28 67 - 75
(நன்றி - சைவம் தளம்)

அதுவும் உமையவள் அவன் ஆடும் நடத்தினைக் காணும் வர்ணனையும் கவனித்துப்
பார்க்கும்போது இது ஆனந்த தாண்டவமாக தில்லையில் ஆடல்வல்லான் ஆடிய
நாட்டியம் தான் என்பதும் மறைமுகமாக விளங்கும். இளங்கோ இன்னொரு இடத்தில்
மதுரை மாநகரத்து வெள்ளியம்பலத்தான் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம்பலத்து
(பதிகம், 39-41)

வெள்ளியம்பலத்தில் ஆடலரசன் இருப்பதற்கு முன்பே தில்லையிலும் ஆனந்த தாண்டவம் ஆடும் கூத்தன் கோயில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இதன்கண் தெரிகிறது. சரி, இளங்கோ தம் சிலம்பில் திருமலையைப் பற்றியும் திருவரங்கத்தையும் பற்றிச் சொன்னவர் தில்லையையும் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். ஆனால் திருவரங்கம், திருமலைக் கோயிலைப் பற்றிச் சொன்னது பாதைவழி காட்டுவதற்காக மட்டுமே. அந்தப் பகுதியில் கோவலனும் கண்ணகியும் அடிகளும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் நடுவழியில் எந்தப் பாதையில் சென்றால் மதுரை வரும் என்பதற்காக போகிற போக்கில் காண்பிக்கப்பட்ட சரித்திரப் பொருத்தமான வார்த்தைகள் இவை. இந்த வழியில் தில்லையம்பதி வருவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்பதால் தில்லையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆடலரசனின் ஆனந்த தாண்டவம் பற்றிய அற்புதக் குறிப்பை அவர் கவிதைப் படுத்திய நயம் மிக அருமை.

ஐந்தாம் நூற்றாண்டு பல்லவமன்னரான ஐயடியார் காடவர்கோன் தன் ஷேத்திரத் திருவெண்பாவில் முதல் பாடலாகக் குறித்திருப்பது தில்லை பொன்னம்பலம் பற்றித்தான். இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐயடிகள் பற்றிய செய்தியை சுந்தரரும் தம் திருத் தொண்டத் தொகையில் சேர்த்திருக்கிறார்.

ஓடுகின்ற நீர்மை ஒழித்தலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற
நல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
(வாழ்க்கை ஓடுகின்றது.. உற்றார் உறவினரும் உம்மை விட்டு பிரிகின்றார். எப்படியும் முடிவில் போய்ச் சேரவேண்டிய மயானத்துக்குப் போவதற்கு முன்பே, நல்ல நெஞ்சே.. திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக! - சுருக்கமான விளக்கம்)

ஐயடிகள் தனது சகோதரனான சிம்மவர்ம பல்லவனை திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருக்குளத்தில் குளிக்கவைத்து அவன் தொழுநோயைப் போக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இதனால் சிம்மவர்மன் திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்பர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிம்மவர்மன் என்ற பெயரில் மூன்று விதமான காலகட்டத்தில் பல்லவ அரசர்கள் இருந்தனர் என்பதற்கான சில செப்பேடுகள் ஆந்திரத்தில் (கோவூர்-நெல்லூர் செப்பேடு) கிடைத்துள்ளன. இவர்களில் எந்த சிம்மவர்மனின் சகோதரர் ஐயடிகள் என்று தெரியவரவில்லை. ஆனாலும் ஐயடிகள் மகேந்திரனின் தந்தையான சிம்மவிஷ்ணு (550-580) காலத்துக்கும் முற்பட்டவர் என்று வரலாற்றாசிரியர் உடுமலை திரு என்.சுப்பிரமணியன் தனது தமிழ்நாடு வரலாறு – (முதல் பகுதி) நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பதினோராம் திருமுறையில் நக்கீரதேவனார் எழுதிய பாடல்களில் பொன்னம்பலம் பற்றிய ஒரு வரி வந்தாலும், நக்கீரதேவர் எந்தக் காலகட்டவர் என்பதை ஆராய இன்னொரு கட்டுரை தேவை என்பதால் அந்தப் பாடலை நாம் இங்கே கொண்டுவரமுடியாது.

"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” என்று அப்பர் சுவாமிகளால் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தில்லைச் சிற்றம்பலம் அவர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் முன்பேயே இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றும் சித்தர்களால் வழிபடும் சில தலங்கள் கொல்லி மலைக் காடுகளிலும் மலை மேலும், கடற்கரை ஓரத்திலும் இருப்பதாக அறிகிறோம். தில்லைவனம் என்பதே தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. முதலில் வனங்களுக்கிடையே இருந்த கோயில் காலம் போகப் போக வெளிப்பட்டிருக்கவேண்டும். இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் புராணங்களில் பெயர் பெற்றுள்ளது உண்டு. தில்லைக்கு புலியூர் என்று ஒரு கால கட்டத்திலும் (தேவாரப்பாடல்களுக்கு முன்பு – வியாக்ரபாதர் அல்லது புலிக்கால் பாதர் பூசித்ததால் வந்த பெயர், பெரும்பற்றப்புலியூர் என்ற பெயரில் தேவாரப் பாடல்கள் காலத்துக்கும் பின்னும் (ராஜராஜசோழன், குலோத்துங்கன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது), சிதம்பரம் என நிகழ்காலத்திலும் காலத்துக்கு ஏற்ப பெயர்கள் மாறிகொண்டே வருகின்றன. சிதம்பரம் எனும் பெயர் திருமூலர் திருமந்திரத்திலும் இடம் பெற்றுள்ளதால், வடமொழிப் பெயரான சிதம்பரம் புராணகாலத்திலும் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள், வடமொழியில் சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் புலிக்கால் முனிவரின் வேண்டுதலுக்கேற்ப தில்லை நடராசனின் ஆனந்த தாண்டவமே பொற்சபையில் ஆடப்பட்டதாகத் தெரிவிப்பதால், அரசாண்ட மன்னவர்களும் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அவரது சபை கனகசபையாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு பொன் வேய்ந்திருக்க வேண்டும். அதை சிம்மவர்ம பல்லவன் செய்திருந்தாலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் (பராந்தகன், குலோத்துங்கன் போன்றோர்) தொடர்ந்து வந்தாலும் பொன்னம்பலத்தான் என்ற பெயருக்கேற்ப அரசர்கள் ஆலயத் தொண்டு செய்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

ஆக மாணிக்கவாசகர் மனமுருகப் பாடி உருகி, ஆண்டவனுடன் அங்கேயே ஐக்கியமாகிய இந்த ஆனந்த தாண்டவன் ஆடிய கோயில் தேவார காலத்துக்கு முற்பட்டதாக இருந்தது என்பது ஒரு பக்கம் வெளிப்படையாகவே தெரிந்தாலும், மாணிக்கவாசகர் உறுதியாக இந்தப் பழைய காலத்துக்குச் சேர்ந்தவர்தானா என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அத்துடன் அவர் தில்லையில் நிகழ்த்திய வாத விவரங்கள் அக்காலகட்டத்திலா என்பதையும் ஆராயவேண்டும். தில்லையில் மட்டும் இல்லை, வாதவூரார் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோயில்கள் எப்போதிலிருந்து வழிபாட்டுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும். அவர் சமய வாதிகளை எப்படிக் கையாண்டார், அவர் காலத்தில் உள்ள சமய நிலை எப்படி இருந்தது, என்பதையும் பார்க்கவேண்டும்.. ஆனால் இவை எல்லாவற்றையுமே அவர் பாடல்களிலிருந்தே சற்று சுருக்கமாகவே பார்ப்போம்..


திவாகர்
இன்னும் வரும்

Tuesday, August 30, 2011

2. மாணிக்கவாசகர் மூவருக்கு முன்னவரா, பின்னவரா?

திருமுறையில் மாணிக்கவாசகர் பாடல்களை முறையாகத் தொகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பி அவர்கள் ஒரு பாடலில் வாதவூரர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்

வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை வண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சைவப் பெருந்தகை நம்பியாண்டார் நம்பி திருவாதவூரரைப் பற்றி தம் ’கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ (பதினோராம் திருமுறை) எனும் பாடலில் (58) வாதவூரரைப் பற்றியும், வாதவூரர் பாடிய சிற்றம்பலத்திருக்கோவைப் பாடல்களைப் பெருமைப் படுத்தியும் எழுதிய பாடல் இது,. அவர் பாடிய திருக்கோவைப்பாடலுக்கு மற்ற கோவைப்பாடல்கள் இணையாக வராது என்பதை இங்கே குறிப்பிடுகிறார். (பின்னே! தில்லையம்பலத்தானே அந்தணன் உருவில் நேரில் வந்து அவர் சொல்ல இவர் எழுத கடைசியில் திருவெம்பாவையை முடித்தவுடன் ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று நேயர் விருப்பமாகக் கேட்டு திருக்கோவையை எழுதி வாங்கிக்கொண்டதாக அல்லவா வாதவூரர் வரலாறு சொல்கிறது!.)

ஆனாலும் இப்படி அழகாக வாதவூரரைப் புகழ்ந்த நம்பியவர்கள் திருத்தொண்டர்புராணத்தில் வாதவூரர் பற்றி ஏதும் சொல்லவில்லை.

பெரியபுராணத்திலும் திருத்தொண்டர்புராணத்த்லும் வாதவூரர் புகழ் பாடப்படாமைக்குக்காரண்ம் எளிமையானதுதான். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதவில்லை, ஆகையினால் நாமும் எழுதவேண்டாம் என்று அவர்கள் இருந்துவிட்டதுதான்.

ஆனால் மனுநீதிச் சோழனைப் பற்றி ஏன் எழுதவேண்டும். அவரைப் பற்றி சுந்தரர் எழுதவில்லையே என்று ஆராயும்போது, மனுநீதிச் சோழன் என்பான் சோழர் குல விளக்கு. உலகத்துக்கே சோழர்களின் நீதி தலையானது என்பதை நிரூபித்த மகாமன்னன். மிகப் பெரிய சிவபக்தன்.

(” தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ் சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதி (பெரிய புராணம்)- சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞ னாகிய அம்மகன், நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதி)

தனக்கு அடுத்து பதவியேற்கப் போகும் சிவநெறிச்செல்வனான மகனை, அவன் அறியாது செய்த பாவத்துக்காக நீதியின் கண்கொண்டு தேர்க்காலில் இட்டவன். இத்தகைய செயலை யார்தான் செய்வர். மனித இனத்திலேயே முடியாத செயல் ஒன்று என்னவென்றால் தம் மகனைத் தம் கையால் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் தியாகம் செய்தல். இப்படிப்பட்ட மகனை பசுவின் கன்று ஒன்று இவன் தேர்க்காலில் பட்டு இறந்தமைக்காக தண்டிக்கிறான். இத்தகைய தியாகம் சோழகுலத்துக்கே தலைமகுடமாய் விளங்கிப் பெருமை சேர்த்ததால், அந்த மனுநீதிச் சோழனின் புராணத்தை முதலாக பெரியபுராணத்தில் தலைவாசலாக வைத்து திருத்தொண்டர் புராணத்தை ஆரம்பிக்கிறார்.

ஆனால் ஒரு மனுநீதிச் சோழனைத்தவிர திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடத்தவறிய வேறு எந்த அடியாரையும் அவர் குறிப்பிடவில்லை.

அப்படியானால் சுந்தரர் எழுதிய இந்த அறுபது (அறுபதும், சுந்தரர், சுந்தரரின் தாய்-தந்தை ஆக மூவர் சேர்ந்து அறுபத்துமூவர்) திருவடியார்கள்தான் அந்த மொத்தப் பழைய காலத்தில் சிவனுக்கு மிகவும் பிடித்த திருவடியார்களாக இருந்திருப்பார்களா.. இந்தக் கேள்வி குழந்தைத்தனமானது என்று எண்ணத்தோன்றும். சிவன் அருள் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர், எல்லோரையும் எழுதவேண்டுமென்றால் அது முடியாதுதான். ’ஒரு சிலரை’ சுந்தரர் இறைவன் திருவருளால் திருவாரூரில் அன்று நினைத்துப் பார்த்துப் பாடியிருக்கவேண்டும் என்ற ஒன்றுதான் இந்த ஒன்றுக்கு சான்றோர்கள் கூட பதிலாகச் சொல்லுவர்.

சுந்தரர் எழுதவில்லை, ஆகையினால் அவருக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் அருள் பெற்ற சிவனடியார்கள் இத்தனை பேர்தான் என்று நாம் கருதமுடியாதல்லவா.. சுந்தரமூர்த்தியாரும் இதுதான் முடிவு என்று சொல்லவில்லையல்லவா.. எத்தனையோ சிவனடியார்கள் சரிதம் விடுபட வாய்ப்புண்டு அல்லவா (அவர் மாணிக்கவாசகராகட்டும் அல்லது வேறு ஒருவராகத்தான் இருக்கட்டும்). ஆகையினால் திருத்தொண்டத் தொகைக்கும் அதன் அடி ஒற்றி எழுதப்பட்ட பெரியபுராணத்துக்கும் வாதவூரரைப் பொறுத்தவரை எவ்வித சம்பந்தமுமில்லை என்ற முடிவுக்கு முதலில் வரலாம் என்றுதான் தோன்றுகிறது.

மூவரில் மூத்தவரான அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏறத்தாழ நாற்பதினாயிரத்துக்கும் மேலாக பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். சரியாக கிடைத்த பாடல்களை முறையாகத் தொகுத்ததில் நமக்கு எஞ்சியவை 8250 பாடல்கள் மட்டுமே.

மூவருக்குப் பின்னவரா மாணிக்கவாசகர் என்ற பார்வையில் இரண்டாவதாகப் பார்க்கையில் மாணிக்கவாசகப் பெருமான் பற்றி நேரிடையாக எழுதப்பட்ட இரண்டு திருவிளையாடல் புராணங்கள். இவைகள் மாணிக்கவாசகர் பின்னவர் எனும் கருத்தை ஒப்பவில்லை. அரிமர்த்தனபாண்டிய அரசன் அவையில் அமைச்சராக இருந்த மணிவாசகர் குதிரைகளுக்காக செலவழிக்க வேண்டிய செல்வத்தை திருப்பெருந்துறை கோயிலுக்காக செலவழித்ததால் ஏற்படும் அவமானங்களும், இறைவன் அதற்கு பிறகு செய்த நரியைப் பரியாக்கியது, வையை பெருகியது, கரை கட்டியது, பிட்டுக்கு மண் சுமந்த கதைகள் மூலம் அவன் செய்த லீலைகளையும் விளக்கியுள்ளன.

பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் எனும் நூல் ஏறத்தாழ வாதவூரர் எழுதிய கீர்த்தித் திருவகலை ஒட்டியே மேற்கண்ட சம்பவங்களை எழுதியுள்ளது. இந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் பன்னிரண்டாம் நூற்றாண்டு கடையிலோ அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டது என்பர். இன்னொரு பெரிய புராணம் பரஞ்சோதி முனிவர் எழுதியது. (பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும்) இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு என்பார். பரஞ்சோதியார் வாதவூரர் அவதரித்த படலமாகவே ஆலவாய்த் திருவிளையாடல்களில் அவர் வரலாற்றைப் பாடியுள்ளார்.

ஆயினும் சரித்திர ஆய்விலும் சமய ஆய்விலும் மிகவும் தேர்ச்சி பெற்ற சதாசிவப்பண்டாரத்தார் இந்த இரு நூல்களும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்பதை விவரித்துச் சொல்கின்றனதான் என்றாலும் இது சரித்திர ஆய்வுக்குப் பொருந்தாது, ஆகையினால் மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் பிற்பட்டதுதான் என்று தன் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதைப் போலவே மாணிக்கவாசகர் தம் திருச்சிற்றம்பல திருக்கோவையில்

மன்னவன் தெம்முனை மேற்செல்லுமாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன்
(மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான் – நன்றி தேவாரம் தளம்)


இங்கு கூறப்பட்ட வரகுணன் எனும் தென்னவன் எனும் பாண்டியமன்னன் கி.பி 800-830 இல் ஆண்ட முதலாம் வரகுணனாகவோ அல்லது 1862 இல் ஆண்ட இரண்டாம் வரகுணனாகவோ இருக்கவேண்டும் என்கிறார் பண்டாரத்தார். இந்த ஒரு வரியால் மாணிக்கவாச்கரின் காலத்தைக் கணக்கிடமுடியுமா.. ’வரகுணன்’ என்ற பட்டப் பெயரை எந்த பாண்டிய அரசனும் பெற்றிருக்கலாமே.. திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணபாண்டியனாகவோ அல்லது பட்டினத்தடிகள் பாடிய மிகச் சிறந்த சிவபக்தசிரோன்மணியாக இருந்த வரகுணனாகவோ கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அந்தக் கால அரசர்கள் எல்லோருக்குமே அதிகமான அளவில் பட்டப்பெயர்கள் இருந்தன என்பது நரசிம்மபல்லவன் அல்லது மகேந்திர பல்லவன், ஏன் ராஜராஜ சோழன் சரித்திரத்திலிருந்தும் தெரியும். ஆகையினால் இந்த வரகுணனுக்கே அமைச்சகராக வாதவூரர் பணிபுரிந்தார் என்றும் சொல்ல முடியாத் நிலை. கடந்து போன சரித்திரத்தில் அதி விரைவாக எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாது - அது விரிவாக வெளிப்படும் வரை.

மாணிக்கவாசகர் தில்லையிலே அதிக வருடங்கள் இறைப் பணி செய்தவர். தில்லையம்பதி வெகுவாக அறியப்பட்டது மூவர் காலத்தில்தான் என்று சொல்வர். அதற்கு முன்பு தில்லையைப் பற்றிய அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூட சொல்வர்.

நாம் தில்லை பற்றிய திரட்டிய தகவல்களை கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.

திவாகர்

இன்னும் வரும்.

Labels: