Wednesday, June 06, 2007

பிடிச்சுகிச்சு:

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற் பெயரை ஒரு பெரிய கதைக்கு (2 பாகங்கள்) தலைப்பாகக் கொடுத்தாலும் அதன் கதாநாயகன் மட்டும் அந்த ஜஸ்டிஸ் இல்லைதான். ஆனால் கோர்ட் அதாவது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தக் கதையின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுவார் தேவன். அவர் இந்தக் கதை எழுதிய காலக்கட்டத்தில் கோர்ட்டுகளில் ஜூரர் சிஸ்டம் உண்டு போலும். அதாவது வெவ்வேறு வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஏழு அல்லது ஒன்பது நபர்களை ஜூரர்களாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பெரிய கிரிமினல் வழக்கிலும் நியமிப்பார்கள். அந்த ஜூரர்களின் மெஜாரிடி முடிவின் படி 'கனம்' நீதிபதி தீர்ப்பு சொல்லுவார். இதற்கு அப்பீல் கிடையாது. (வழக்குகளும் விரைவாக முடிக்கப்பட்டு முடிந்தவரை நல்ல நியாயமும் கிடைக்கச் செய்யும் வழிமுறை இது)

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் புதினத்திலும் இப்படி ஒரு கேஸ். கொலை வழக்கு. கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் இருக்கும் 'வரதராஜபிள்ளை' (ஏறத்தாழ கதாநாயகன்) பாத்திரத்தை நல்லவராகவே கதை முழுவதும் சுட்டிக்காட்டி வருகிறார் தேவன். ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சாட்சிகள் இவை அனைத்தும் வரதராஜபிள்ளைக்கு எதிராகவே கோர்ட்டில் அரங்கேறிகொண்டிருக்கின்றன.

இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சியை ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமெ உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.

அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் பேசுகிறார்.

"பிடிச்சுகிச்சு"

அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.

"என்ன பிடிச்சுகிச்சு?"

மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தைய்யா பதில் சொல்லுவார்.
"நேத்து ராத்திரி... மொட்டை மாடில படுத்தேனா?... ஒரே பனியா?... அதான் பிடிச்சுகிச்சு.." என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.

சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி...

இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது அவர் கதைகளை படித்த பலருக்குத் தெரிந்ததுதான்.

'மிஸ்டர் வேதாந்தம்' என்றொரு புதினம். தேவன் 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரிய்ராக 15 வருடங்கள் பணி புரிந்தவர். தன் பத்திரிகை தொழில் சம்பந்தப்பட்ட கதையாகவே 'மிஸ்டர் வேதாந்தம்' புதினத்தை வெளியுலகுக்குக் காட்டினாரோ என்னவோ. இந்தக் கதையின் நாயகன் வேதாந்தம் ஒரு வளரும் எழுத்தாளன். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் தன் எழுத்துக்களைப் பிரசுரிக்கும்படி கோருவான்.

'ஸார், .. நீங்க படிச்சுப் பார்த்துட்டு..நல்லா இருந்தா உங்கப் பத்திரிகைல பிரசுரம் பண்ணுங்க..ஸார்.. நான் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கேன் ஸார்.."

அதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிதானமாக சொல்லுவார்.
'எல்லாம் சரிப்பா.. நீ நல்லாவே எழுதியிருக்கே.. ஆனா பாரு.. எங்களது பிரபல பத்திரிகை.. அதனால நீ என்ன பண்றே.. முதல்ல அங்க இங்க எழுதி பிரபலமாயிட்டு அப்பறமா இங்கே வா... அப்ப நீ ஒரு குப்பையை எழுதிக் கொடு..அத அப்படியே நாங்க எங்க பத்திரிகைல பிரசுரிக்கிறோம்..அதுவரைக்கும் நீ எத்தனை நல்லா எழுதினாலும் அது குப்பைக்கூடைக்குத்தான் போகும்..."

தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் சத்தியமான நிலையில் நிலைத்து நிற்கின்றன. பிரபல பத்திரிகைகளும் இன்றளவிலும் அவர் வார்த்தைகளை அப்படியே காப்பாற்றுகின்றன

Labels:

0 Comments:

Post a Comment

<< Home