Tuesday, May 11, 2010

ஈசனே சிவகாமிநேசனே




நமக்கு மிகவும் பிரியமானவரைச் சென்று காணும்போது கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இணையெல்லாம் ஏது.. சிதம்பரத்தில் கொலுவிருக்கும் சபாநாயகனான தில்லையம்பலத்தானைத் தான் சொல்லுகிறேன்..

காலம் மாறினாலும் அவன் கோலம் மாறவில்லைதான். அது எப்படி மாறும்? பிரபஞ்சத்தின் மத்தியில் கோயில் கொண்டு தானும் ஆடி, அகிலத்தையும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் அவன் ஆட்டத்துக்கு ஈடு இணை இல்லைதான். அந்த வித்தகன் நர்த்தனம் மட்டுமா ஆடுகிறான், அவனைக் கண்ணாறக் காணும் நம்மையும் நம் மனத்தையும் ஒருசேர ஆட்டுவிக்கிறான். அவன் அருகேயே நிற்கும் நாயகியைப் பாருங்களேன்..

அவனை இடம் கொண்டவளுக்கு எத்தனை அடக்கசொரூபம்.. மதம் கொண்ட யானையைப் போன்ற ஆயிரமாயிரம் யானைகளின் சக்தி கொண்ட மகிஷாசுரனைக் கொன்ற அந்த உக்கிர சொரூபியா இவள்.. இத்தனை சாந்தம் சிவகாமசுந்தரியிடத்தில் எப்படி இடம் கொண்டது.. சிவனின் இடப்பாகத்தைக் கொண்டதாலா..

அல்லது தலைவன் தன் இடது காலைத் தூக்கிய கோலத்தில் இருக்கும்போது, தூக்கப்பட்ட அந்த இடதுகாலே தன்னுடையதுதானே என்ற உண்மையை நமக்கு இப்படி அடக்கமாகக் காண்பிக்கிறாளோ.. அவனுள் ஆடியது தாமே என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறாளோ.. அவன் ஆடிய ஆட்டத்தின் சக்தி தானே என்றாலும், அந்த ஆட்டத்தால் உலகமே இயங்குகிறது என்று எத்தனைப் பெரியவர்கள் அறிந்து வியந்து நின்றாலும், அந்த உண்மையை எளிமையாய் உலகத்தோருக்குக் காண்பிக்க, இப்படி அடக்கசொரூபமாய் பக்கத்தில் நின்றிருக்கிறாளோ.. இருக்கலாம்.. மாயாசொரூபி அவள்..

அல்லது ஒற்றைக் காலில் நின்றாடும் ஈசனுக்கு அந்தக் கஷ்டம் சிறிதும் தெரியாமல் அவன் அருகிலேயே துணையாக நின்று ஆறுதல் தருகிறாளோ.. அன்னையாய் பக்தருக்குத்தான் ஆறுதல் தருபவள், உலகை ஆளும் ஈசனுக்கும் அன்னையாய் மாறினாளோ.. இருக்கலாம். கணவனுக்கு ஒவ்வொரு சமயத்தில் மனைவிதான் மந்திரி., மனைவிதான் அன்னை.. அவள்தான் எல்லாமும்.. ஈசன் மட்டும் விதிவிலக்கா என்ன.. அப்படித்தான் தோன்றுகிறது..

ஒருவேளை தன்னோடு போட்டி போட்டு ஆடியதால் என்னதான் ஈசன் வென்றாலும் அவள் துணை தேவைதான் என்பதையும் வெளிக்காட்ட ஈசனே அவன் அருகேயே அவளையும் ஒருசேர நிற்கவைத்தானோ, அவள் இல்லையேல் அவன் இல்லை என்பதை உலகத்தாருக்கு உணர்த்த நடத்தப்பட்ட அந்த நர்த்தனம் நாடகமோ.... இருக்கலாம்.. இந்த ஆதி தம்பதியர் எதையும் செய்வார்கள்..

இப்படி இருக்குமோ, போட்டி போட்டு ஆடும்போது தலைவனின் ஆட்டத்தை ரசிக்கமுடியவில்லையே.. இப்போதுதான் ஆற அமர சுகமாக ரசிப்போமே என்று அவன் ஆடும் ஆட்டத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே ஆவலாய் அருகேயே நிற்கிறாளோ.. ஈசனின் முதல் ரசிகை அவளேயென்ற பெருமிதத்தோடு அவன் ஆட்டத்தைப் பார்க்கிறாளோ..

இருந்தாலும் அவன் அருகே இருக்கையில்தான் அவள் முகத்தில் எத்தனை அழகு.. சிவகாமியின் அழகைக் காண, இந்த அழகுக்காகவே ஈசன் எத்தனைமுறை போட்டி வைத்தாலும் வேண்டுமென்றே ஆடுவானோ என்னவோ.. அவன்தான் ஆதி நாடகத்தானாயிற்றே .. ஆடும் ஆதிசிவனையும் ஆட்டுவிக்கும் இந்த அழகுக்காக அவன் செய்தாலும் செய்வான்..

ஆஹா.. அவள் அழகி மட்டுமல்ல.. மஹா சக்தியல்லவா.. விவரம் தெரிந்தவள்.. மறுபடியும் எங்கே போட்டி என்று கேட்டு இவர் ஆட்டத்தைத் தொடங்குவாரோ என்று, தலைவனை ஒரு காலிலேயே அதுவும் அவனுக்கு சொந்தமான வலது காலிலேயே அங்கேயே நிலையாக நிற்கவைத்துவிட்டாளோ.. அப்படித்தான் இருக்கும்.. இடது கால் அவளுடையதல்லவா.. அது தூக்கியபடிதான் இருக்கும்.. அது இறங்காதவாறு பார்த்துக் கொள்ள முழு உருவமாக சிவகாமசுந்தரியாக பக்கத்திலேயே காவல் இருப்போமே.. என்று அருகேயே நிற்கிறாளோ.. ஆனால் பாருங்களேன் அவள் முகத்தை.. ஏதும் தெரியாத சின்னஞ்சிறு சிறுமி போல வந்து நிற்கிறாள்.. அப்படித்தான் தெரிகிறது..

என்ன இருந்தாலும் அவள் அடக்கசொரூபிதான்.. அடக்கமே உருவான அம்பிகையே! உன் தாள்களுக்கு வணக்கம்!! ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராசனே உன் தாள்களுக்கு வணக்கம்!!.



(சென்ற ஞாயிறன்று காலை தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் கிடைத்த அபூர்வமான அவகாசத்தின் விளைவுதான் இந்தப் பதிவு - படம் உதவி கூகிளார்)

Labels:

25 Comments:

At 11:55 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

நீங்கள் சொல்லச் சொல்ல...

சின்னஞ் சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே..
பாட்டு தான் நினைவுக்கு வந்துச்சி!

பதிவை முடிக்கும் போது நீங்களும் //ஏதும் தெரியாத சின்னஞ்சிறு சிறுமி போல வந்து நிற்கிறாள்..//-ன்னே முடிச்சி இருக்கீக! :)

 
At 11:57 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

தில்லைச் சிற்றம்பலக் காட்சி வர்ணனையையும் அப்படியே தரலாமே திவாகர் சார்!
இது வரை தில்லைக்குச் சென்று சேவிக்காதவர்களுக்கு எல்லாம், அம்பலம் ஏறிச் சேவிக்காதவர்களுக்கு எல்லாம் காணக் கிடைக்கும்!

 
At 12:38 PM, Blogger Kavinaya said...

//உலகை ஆளும் ஈசனுக்கும் அன்னையாய் மாறினாளோ..//

"அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினாள்" என்றாரே பட்டர்.

தில்லைநாதனை பற்றி ஆரம்பித்து விட்டு அம்மாவைப் பற்றியே சொல்லிக் கொண்டே போறீங்களே... அவளுக்கு அம்புட்டு காந்த சக்தி :)))

நன்றி திவாகர் ஜி!

 
At 5:35 PM, Blogger Vijay said...

அருமை . ஒருவர் பாவம் அப்படி ஆடிக்கொண்டு இருக்க ..அவரை விட்டுவிட்டு ..வரவர நீங்க ரொம்ப தான் சைடு அடிக்கறீங்க

 
At 5:40 PM, Blogger ஷைலஜா said...

///
நமக்கு மிகவும் பிரியமானவரைச் சென்று காணும்போது கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இணையெல்லாம் ஏது.. சிதம்பரத்தில் கொலுவிருக்கும் சபாநாயகனான ///////



சிதம்பரநாயகனைக்காண நினைக்கும் என் ஆவலை முதல் வரி அதிகப்படுத்திவிட்டதே! ஆறுமோ ஆவல் அம்பலவாண்னை நேரில் காணாமல்?!

 
At 5:43 PM, Blogger ஷைலஜா said...

.. ஆனால் பாருங்களேன் அவள் முகத்தை.. ஏதும் தெரியாத சின்னஞ்சிறு சிறுமி போல வந்து நிற்கிறாள்.. அப்படித்தான் தெரிகிறது..

என்ன இருந்தாலும் அவள் அடக்கசொரூபிதான்.. அடக்கமே உருவான அம்பிகையே! உன் தாள்களுக்கு வணக்கம்!! ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராசனே உன் தாள்களுக்கு வணக்கம்!!.
......//////

ஆஹா அண்ணலைப்பற்றி கூற வருகிறீர்கள் என் நினைத்தேன் அன்னை ஆட்கொண்டுவிட்டாளா தங்களை?:)சக்தி இன்றி சிவமேது? அருமையான இடுகை திவாகர் வாசிக்கக்கொடுத்தமைக்கு நன்றி!

 
At 6:10 PM, Blogger Geetha Sambasivam said...

//ஆறுமோ ஆவல் அம்பலவாண்னை நேரில் காணாமல்?!//
@ஷைலஜா, ஆச்சரியமாத் தான் இருக்கு!

 
At 6:12 PM, Blogger Geetha Sambasivam said...

திவாகர், சீர்காழியின் குரலில் சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி பாடலும்,அதில் வரும், "பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்" என்ற வரிகளுமே நினைவில் மோதின. கொஞ்ச நாட்களாகவே இந்தப் பாடல் தான் நினைப்பிலே இருக்கு. நன்றிங்க.

 
At 6:37 PM, Blogger ஷைலஜா said...

கீதா சாம்பசிவம் said...
//ஆறுமோ ஆவல் அம்பலவாண்னை நேரில் காணாமல்?!//
@ஷைலஜா, ஆச்சரியமாத் தான் இருக்கு!

6:10 PM

//////<<<<<<<<<<<<<<<<<<

என்ன கீதா ஆச்சரியம் இதில்? ஸ்ரீரங்கத்தில் இருக்கிறவரை ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரி அனையையும் அடிக்கடி தரிசிக்க என் அப்பாவுடன் சென்றவள் நான்! சிதம்பரத்திற்கு சின்ன வயசில் ஒரே ஒருதடவை தான்சென்றிருக்கிறேன் ....சிதம்பரஷேத்திர மகிமைகளை வளர்ந்தபின்பு நிறையதெரிந்துகொண்டதும்,பல
வருடங்களாக சிதம்பரம் செல்லும் ஆவலில் தான் இருக்கிறேன் இதை ”அவன் ”அறிவான் அதுபோதும் எனக்கு!

 
At 8:04 PM, Blogger Geetha Sambasivam said...

//என்ன கீதா ஆச்சரியம் இதில்? ஸ்ரீரங்கத்தில் இருக்கிறவரை ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரி அனையையும் அடிக்கடி தரிசிக்க என் அப்பாவுடன் சென்றவள் நான்! சிதம்பரத்திற்கு சின்ன வயசில் ஒரே ஒருதடவை தான்சென்றிருக்கிறேன் ....சிதம்பரஷேத்திர மகிமைகளை வளர்ந்தபின்பு நிறையதெரிந்துகொண்டதும்,பல
வருடங்களாக சிதம்பரம் செல்லும் ஆவலில் தான் இருக்கிறேன் இதை ”அவன் ”அறிவான் அதுபோதும் எனக்கு! //

ம்ம்ம்ம்ம்???? தவறாய்ப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறேன். மன்னிக்கவும் ஷைலஜா. அருகேயே இருக்கும் ஊர்தானே என்ற எண்ணத்திலே கேட்டேன், இப்போ நாங்க திருவண்ணாமலை பத்திக் கனவு காண்கிறாப்போல் இருக்கு நீங்க சிதம்பரம் பத்திச் சொல்றது. மீண்டும் மன்னிக்கவும்.:(((((((((

 
At 10:26 PM, Blogger V. Dhivakar said...

அன்பு கேஆர்எஸ்: ஆமாம்.. அண்டப் பாடல் அருமையான பாடல்தான். ஆனால் சிவகங்கைக் குளத்தருகே சிவகாமியைக் காண காலை ஏழு மணிவரை காத்திருக்கவேண்டும். அப்போதுதான் சன்னிதி திறக்கிறார்கள்.

>>தில்லைச் சிற்றம்பலக் காட்சி வர்ணனையையும் அப்படியே தரலாமே<<

திருமதி கீதா சாம்பசிவம் மிக அருமையாக சிதம்பர ரகசியம் எழுதினார்களே.. எல்லாவற்றையும் விலாவரியாக எழுதியுள்ளார்கள்..

 
At 10:29 PM, Blogger V. Dhivakar said...

>>அவளுக்கு அம்புட்டு காந்த சக்தி :)))<<

முற்றிலும் உண்மை கவிநயா..

 
At 10:31 PM, Blogger V. Dhivakar said...

>>ஒருவர் பாவம் அப்படி ஆடிக்கொண்டு இருக்க ..அவரை விட்டுவிட்டு ..வரவர நீங்க ரொம்ப தான் சைடு அடிக்கறீங்க<<

விஜய்! காந்தசக்தி எப்படி இழுக்கிறதோ அப்படி இழுபடத்தான் வேண்டும். உங்கள் சிற்பப் பார்வை எத்தனையோ நுணுக்கங்களை சிற்பங்களில் வெளிக் கொணரவில்லையா

 
At 10:34 PM, Blogger V. Dhivakar said...

>>ஆறுமோ ஆவல் அம்பலவாண்னை நேரில் காணாமல்?<<

ஷைலஜா! அதனால்தான் அவனை ‘பெண் பால் உகந்தாடும் பெரும்பித்தன்’ என்று பாடினார்களோ.. கண்டு அவன் அருளை மொண்டு வாருங்கள்..

 
At 10:36 PM, Blogger V. Dhivakar said...

கீதாம்மாவுக்கு சொந்த ஊர் மதுரை என்றாலும் பிடித்த ஊர் சிதம்பரம் என்பதை யாம் அறிவோம்.. சிதம்பர ரகசியத்தின் வலைப்பகுதி குறியீடு இங்கு போடுங்களேன்..

 
At 7:00 AM, Blogger s gowtham said...

Divakar sir,

Your one visit for about an hour made these many people to talk about natarajar in somany angles.

Nataraja kirubai is fully with u.

 
At 8:38 PM, Blogger திவாண்ணா said...

ஆஹா! அழகான ரசனையான பதிவு.
ஏஞ்சாமி சிதம்பரம் போற வழியிலேதானே நான் இருக்கேன். கொஞ்சம் எட்டிப்பாத்து இருக்கக்கூடாதா?
:-(

 
At 10:01 PM, Blogger V. Dhivakar said...

Dr. Thi. Vaa,

நாங்க பண்ருட்டி, சேத்தியாதோப்பு வழியா வந்து அப்படியே திரும்பிட்டோம். கடலூர் ல உங்களைப் பார்க்கிறேன், அடுத்த முறை!

 
At 10:04 PM, Blogger V. Dhivakar said...

கௌதம்!இங்கு பதில் போட்டவர்கள் யாருமே சாமான்யப்பட்டவர்கள் இல்லைதான், நீங்கள் சொல்லியது சரியும் கூட.

 
At 9:55 AM, Blogger manoharan said...

அன்பு திவா,
உன் பார்வையில் ஒராயிரம் அர்த்தங்கள்.
சிவனில்லையேல் சக்தியில்லை,
சக்தியில்லையேல் சிவனில்லை. அவர்களைப் பிரிக்க முடியுமா?.
அருமையான வர்ணனை.
தொடருட்டும். வாழ்க வளர்க

 
At 12:58 AM, Blogger Geetha Sambasivam said...

சிதம்பர ரகசியம்திவாகர் கேட்டுக்கொண்டதன் பேரில் கொடுத்திருக்கேன். இதில் 2007-ல் இருந்து ஆரம்பித்துச் சிதம்பர ரகசியம் பதிவுகள் கிடைக்கும்.

 
At 1:56 AM, Blogger V. Dhivakar said...

கீதாம்மா,
லிங்க் சரியாக வரவில்லை,மறுமுறை போடவும்.

மனோகரா,

நன்றி!!

 
At 11:36 PM, Blogger Geetha Sambasivam said...

சிதம்பர ரகசியம்ம்ம்ம்ம்ம்ம்??? preview பண்ணிப் பார்த்தப்போ சரியா இருந்தது. இப்போவும் சரியா இருக்கு. என்னமோ, பார்க்கலாம்! :)))))

 
At 9:28 AM, Blogger yirus said...

சிவமயம்
நன்றி....

www.perur.in

 
At 9:29 AM, Blogger yirus said...

சிவமயம்
நன்றி....

www.perur.in

 

Post a Comment

<< Home