Sunday, January 11, 2009




அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

இந்தத் தைத் திங்களில் ஒரு புதிய முயற்சியை உருவாக்க எனக்கு ஆண்டவன் அவகாசம் அளித்துள்ளான்.

என்னுடைய சமீபத்து வெளியீடான SMS எம்டன் 22-09-1914 புத்தகம், சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் பழனியப்பா பிரதர்ஸ் - 138 எண் ஸ்டாலில் வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் சில அன்பர்கள் புத்தகத்தை வாங்கி உடனடியாகப் படித்து மிகப் பெரிய ஆதரவுக் கடிதங்களையும் ஈ மெயில் மூலமாக அனுப்பி வைத்தது நெஞ்சுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

சென்ற நூற்றாண்டில் முதல் இருபது ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிக சிறப்பான ஆண்டுகள் எனக் கொள்ளவேண்டும். காரணம் பாரதி, வ.வு.சி., போன்றோர் தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலமது. முதல் உலகப்போர் ஆரம்பித்து முடிந்த காலகட்டல் கூட அதுதான். நாட்டில் சுதந்திர வேட்கை அப்போதுதான் செழித்துத் துளிர்விட ஆரம்பித்த நேரத்தில் முதல் உலகப் போர் அந்த சுதந்திரவேட்கையை சற்று மட்டுப் படுத்திய காலம் கூட அதுதான். இந்தியாவில் தலைமை கவர்னர் ஜெனரல் மற்றும் மெட்ராஸ் மாகாண கவர்னர் இருவருக்குமே நல்ல பெயர் கிடைத்த நேரம் கூட இந்தக் கால கட்டம்தான். அந்த நல்லநேரத்தை சீரழித்து ஆங்கிலேயருக்கு ஒரு நீண்ட கெட்ட கனவினை கொடுத்து இந்தியாவை ஆளுவோருக்கு ஒரு பாடத்தை ஏற்படுத்திச் சென்ற கப்பல்தான் 'எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914'.

ஆம். இந்த 22-09-1914 ஆம் நாள் இரவு 9.20க்கு அந்தப் பொல்லாத எம்டன் கப்பல் தன்னந்தனியே சென்னை கடற்கரையில் எல்லோரும் நின்று பார்க்கும் தூரத்தில் நங்கூரமிட்டு சென்னை மாநகர் மீது பட படவென குண்டு மழை பொழிந்தது. இத்தனைக்கும் சென்னை துறைமுகத்தின் அருகேயே அப்போது பிரிட்டிஷ் கப்பல் படைத்தளம் நல்ல பாதுகாப்பான பலமான நிலையில் இருந்த சமயம். ஏறத்தாழ 60 ஆங்கில போர்க்கப்பல்கள் கீழைக்கடல் முழுதும் ரோந்துப் பணியில் இருந்த காலகட்டத்தில் அநாயசமாக நுழைந்து, பலம் மிகுந்த சென்னை மாநகரத்தின் மீது குண்டு வீசி மிக சுலபமாக தப்பிவிட்ட அந்தக் கப்பல் ஆங்கிலேயரின் ஆணவத்துக்கு சவாலாக அமைந்தது என்னவோ உண்மைதானே..

எஸ்.எம்.எஸ். எம்டன் கதையைப்பற்றியும் பிரிட்டிஷ் அடைந்த துன்பங்களைப் பற்றியும் இதன் ஊடே நம் பாரத மணித்திருநாடு எத்தனையோ வகைகளில் சிறப்புற்றதைப் பற்றியும் இந்தப் புதினத்தில் விவரித்துள்ளேன். மிகவும் வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட நூலாக இக்கதை அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

நண்பர் விஜய், நண்பர் திரு, நண்பர் சதீஷ் மற்றும் நண்பர் ஸ்ரீதர் இவர்களின் சீரிய முயற்சியால் இந்தப் புதினத்தைப் பற்றி தகவல் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு தளத்தை நிறுவியுள்ளார்கள். இந்த தளத்தில் சென்று இந்த புதினத்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பினாலே போதும், உங்களுக்கு மாதிரி புத்தகப் பகுதிகள் அனுப்பிவைக்கப்படும். இந்த தளத்தை ஏற்படுத்தித் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி!!

இந்தப் புதினம் உங்கள் அனைவருக்கும் பலவிஷயங்களில் மகிழ்ச்சியைத் தரும் என்றே நம்புகிறேன்.

மீண்டும் வணக்கங்கள் பல.

அன்பன்
திவாகர்

Labels: ,