

சரி, விஷயத்துக்கு வருவோம். ஆந்திரத்தில் என்றல்ல, பொதுவாகவே நம் நாட்டில் பழைய கோவில்கள் பராமரிப்பு என்றாலே அரசாங்கமும் சரி, பொதுமக்களும் சரி, அக்கறை காட்டுவதில்லைதான். எத்தனையோ பழைய கோயில்கள், அங்குள்ள கலை நேர்த்தியான சிற்பங்கள் பாழடைந்து சீரடைந்து வந்தாலும் இந்தக் கோயில்களுக்கு புனர் உதவி இப்போதெல்லாம் கிடைப்பது அரிதாகிவிட்டது. வெளிநாட்டில் ஒரு நூற்றாண்டு பழசானால் போதும்.. அதை மிகப் பாதுகாப்பாக வைத்துக் ஏகப்பட்ட நிதிகள் ஒதுக்கி பாதுகாக்கிறார்கள். நம் நாட்டில் மிக மிக சிரமம் எடுத்துச் செய்தாலன்றி ஆயிரம் ஆண்டு அல்லது ஈராயிரம் ஆண்டு பழமைகள் சீண்டுவார் இன்றி ஆங்காங்கே சிதறிக் கிடப்பது சகஜம்தான் என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

அழகான சின்ன மலைவரிசை சூழ்ந்த பஞ்சதாரா எனும் ஊரில் எந்தவிதக் கவலையுமின்றி இந்த மனிதன் தொந்தரவே வேண்டாமெனச் சொல்வது போல சிவனார், தர்மலிங்கமெனும் நாமம் கொண்டு தனக்கென ஒரு கோயில் கட்டிக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறார். அவ்வப்போது சுற்றுமுற்று கிராமத்து மக்கள் இந்த பஞ்சதாரா (ஐந்து அருவி என தமிழில் சொல்வதுண்டு) சுற்றுலா வருவது போல இந்த ஆலயத்துக்கும் வருகிறார்கள். வனாந்தரம் போலும் இல்லாமல் அதே சமயத்தில் பாதுகாப்பான இடமாகவும், உள்ளே செல்ல சாலை வசதியும் (உபயம்: திரு பரமேஸ்வரராவ், பாகவதுல சாரிடி டிரஸ்ட்) இருப்பதால் மக்களுக்கு வர சௌகரியமாக இருக்கிறது. ஆனால் இந்த அழகான பழைய கோயில் ஏன் சரிவர பராமரிக்கப் படாமலும், வெளியே தெரிய வராமலும் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் சிதறிக்கிடக்கின்றன போல ஒரு தோற்றம். கோயில் வெளியே கால் வைப்பதற்கே சிரமப்படுகிறோம். எந்தக் கல் சாதாரணக் கல் அல்லது லிங்கம் பூமியில் பதிந்த நிலையில் இருக்கிறதா என்பது தெரியாத நிலை.




கோயிலில் தர்மலிங்கஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் பெருமான் ஆதியில் மகிஷாசுரமர்த்தனியோடு மட்டுமே அங்கு இருந்ததற்கான அடையாளத்துக்காக இன்னமும் எட்டு கைகளோடு கூடிய தேவியின் மகிஷாசுர மர்த்தனி அவதாரம் சுவாமியின் அருகிலேயே அருளாட்சி புரிந்தாலும், இவர்கள் இருவர் மத்தியில் சாந்த சொரூபியாக உமாதேவியை வைத்து பூசை செய்து வருகிறார்கள்.

பாகவதுல சாரிடி டிரஸ்ட் பரமேஸ்வர ராவ் இக்கோயிலுக்காக பெரு முயற்சி எடுத்துவருகிறார். ஏதோ ஒரு அளவுக்கு இன்று அந்தக் கோயில் வழிபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இது போதாது. கோயில் கருவறை மேற்பரப்பு வெறும் சுண்ணத்தால் ஒவ்வொரு வருடமும் ஏதோ பூசி மெழுகப்பட்டாலும் அது நிரந்தர வழியல்ல. மழை நாட்களில் நிச்சயமாக கஷ்டம்தான். ஆனாலும் இப்படியே ஒவ்வொரு வருடமும் காலம் போய்க் கொண்டே இருப்பதால், போகும் வரை போகட்டும் என இருந்து விடலாமோ.
ஆதியில் கோயில் கட்டும்போதே அந்த அரசர்கள் நீண்டகால நிர்ணயம் செய்துகொண்டுதான் கட்டுகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகள் இடைவெளியில் தேவைப்பட்ட கட்டுமானப் பணிகள் செய்து புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். பழைய கோயில்கள் நாடெங்கும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இப்படி புதிப்பிக்கப்படத் தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட கட்டுமானப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால்தான். ஆனால் இன்றைய நவீன கால கட்டத்தில் மக்கள், இந்த மக்களை ஆளும் ’மக்கள்’ பழமையின் பொக்கிஷத்தை மறந்து போகிறார்கள். மாயமந்திரமும், அதிசயங்களும் நடத்தினால்தான் அது கடவுள், அங்கு இருக்கும் கோயில்களில்தான் கடவுள் வசிப்பார்கள் என்ற மூட நம்பிக்கை இன்றுள்ள நிலையில் மக்கள் மனதில் பரவிக் கிடக்கும் இன்றைய சூழ்நிலையில் இப்படிப்பட்ட பழமையான கோயில்கள் அவர்கள் கண்ணில் படாதுதான்.

(மலையருவியிலிருந்து வரும் தண்ணீரை ஒரு பெரிய குழாய் மூலம் வரவழைக்கிறார்கள் - இதைப் போல மொத்தம் ஐந்து அருவிகள் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த ஊருக்கு பஞ்சதாரா என்று பெயர் ஏற்பட்டது)