Wednesday, February 11, 2009

விசாகப்பட்டினத்தில் நடந்த 'எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914' புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் திரு ஆர். ராகவேந்திரன், (மேல்நாள் தலைமைப் பேராசிரியர் - வாரங்கல் ரெஜினல் இஞ்சினீரிங்க் கல்லூரி, தற்சமயம் உறுப்பினர், மைய நீர் ஆய்வு கமிஷன்.) பேசியதில் ஒரு பகுதி:
-----------------------------------------------------------------------------------------------------------------

அப்துல் கபூரூக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் என்ன சொல்லமுடியும்?. ஆனால் அப்படிப்பட்ட சம்பந்தத்தை ஆதாரங்களோடு கொண்டு காண்பித்தால் நமக்கு ஆச்சரியம் வராதா.. எஸ் எம் எஸ் எம்டன் போர்க்கப்பல் எங்கே.. கதைக்கான கருவான சிவயோகம் எங்கே? இரண்டும் இணையமுடியும் என்பதை இந்தப் புத்தகத்தில்தான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.

ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் அதன் முதல் ஐந்து ஆறு பக்கங்களிலேயே இது எங்கு போகிறது, இந்தக் கதை நன்றாக இருக்குமா.. எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கண்டு கொள்ளும் விதத்தில் இந்தக் கதையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம். தாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் ஆசிரியர். கதை மிகவும் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

சிவயோகமான சமாதி நிலையை நம் முன்னோர்கள் கடைபிடித்த விதத்தையும் எப்படி அடையலாம் என்பதனையும் எளிமையான வார்த்தைகளால் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்த மனித பிறவியிலே நாம் எப்படியெல்லாம் வாழ்ந்து சாதனை செய்கிறோம் என்பதை விட நாம் பிறவி எடுத்துள்ள இப்பிறப்பை எப்படி உபயோகப்படுத்தினால், அந்தப் பிறவி எடுத்ததன் பயன் கிடைக்கும் என்பதை தெளிவாக்கியுள்ளார் திவாகர்.

மனிதனுக்கு எப்போதுமே தானே எல்லாம் செய்வதாக நினைத்துக் கொள்ளும் நிலை வருவது சகஜம். எத்தனையோ சாதனைகள், அதனால் ஏற்படும் பயன்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்று மனிதன் தான் செய்ததாகவும் செய்து விட்டதாகவும் பீற்றிக் கொள்வான். இதிலிருந்து மாறுபட்ட கருத்தும் உண்டு. அது எல்லாமே இறைவன் விதிப்படி நடப்பதுதான். இறைவன் செயலால் மட்டுமே ஒரு காரியத்தையோ அல்லது புதிய கண்டுபிடிப்பையோ மனிதனால் நிகழ்த்தமுடியும். அவன் அருளின்றி ஓரணுவும் அசையமுடியாது. அவன் அருள் வைத்தால் அணுவும் மிகப் பெரிய சக்தி பெறும் என்பது ஒரு கருத்து. ஆசிரியர் இந்த இரண்டாவது கருத்தை மையமாகக் கொண்டு கதைக் களத்தில் காய்களை நகர்த்துகிறார். இதுவும் மிகவும் போற்றுதலுக்குரிய விஷயம்.

பாரதநாடு பழம்பெரும் நாடு. எத்தனையோ முனிவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், எத்தனையோ மதங்கள், நல்வழி காட்டுவதற்கு எத்தனையோ வழிகள் எல்லாம் கொண்ட இந்த நாட்டில் மனித சாதனைகள் மட்டுமே தற்சமயம் போற்றப்படுகின்றது.

மனிதன் சாதனை மட்டுமே அவன் முன்னேற்றத்திற்கான முத்திரை என்று அரசாங்கங்களே ஏற்றுக் கொண்ட ஒரு விசித்திரமான காலகட்டத்தில் எம்டன் கப்பல் சென்னை நகரத்து துறைமுகத்தில் நடத்திய தாக்குதல் தொடங்கி, அந்தக் கப்பல் செய்த சாதனைகளுக்குப் பயந்து, ஆங்கிலேய அரசாங்கம் விசித்திரமாக நடந்து கொண்ட முறைகளும் நடுவில் கதையின் நாயகனுக்குக் கப்பலில் கிடைக்கும் அனுபவங்களும், நாயகன் கப்பலில் கடல் நடுவே இருக்க நாயகி இங்கே நிலத்தில் ஆங்கிலேய போலிசாரின் கோபத்துக்கு ஆளாகி நாயகன் நல்லவன் என்பதை நிரூபிக்க அவள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.. ராஜாக்கள் எத்தனை உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்து காட்டினார்கள். தனக்குக் கிடைத்த மனிதப் பிறவியை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையெல்லாம் தனக்கே உரிய பாணியில் எளிமையான தமிழில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. எல்லா விஷயங்களுமே எல்லோரும் விரும்பும்விதத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டவிதம் அருமை. எம்டன் கப்பலோடு நாம் செல்லுகின்ற அதே நேரத்தில் நிலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சமும் நமக்கு உருவாவதும் உண்மை. நிலத்தில் நடக்கும் சிவயோகத்துக்கான ஆன்மீகமும் அரசியலும் ஒன்று சேர்ந்து. நீரில் நடக்கும் சாகசங்களும் போராட்டங்களுடன் கடைசியில் ஐக்கியமாகும்போது அது ஒரு மாபெரும் பலனைத் தருகிறது. அந்தப் பலன் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன்தான் அனுபவபூர்வமாக மட்டுமே உணரமுடியும்.

அதுதான் பண்டைய பாரதத்தின் மகிமை என்றால் அது மிகையல்ல.
----------------------------------------------------------------------------



(பேராசிரியர் ராகவேந்திரனும் திரு நல்லி குப்புசாமி செட்டியாரும் - சென்ற வருடம் நடந்த விசித்திரசித்தன் புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுத்த படம் (file photo). இப்போது உதவுகிறது)

----------------------------------------------------------------------------------------------------------

Labels: ,